அதிமுக ஆட்சியில் அறிவித்த எந்த மின் திட்டமும் 5 ஆண்டுகளில் தொடங்கப்படவில்லை: கருணாநிதி
சென்னை: அதிமுக ஆட்சியில் அறிவித்த எந்த மின் திட்டமும் 5 ஆண்டுகளில் தொடங்கப்படவில்லை திமுக ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட திட்டங்கள் மூலமாகவே மின் உற்பத்தியில் தமிழகம் முன்னேற்றம் அடைந்துள்ளதாக திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
முதலமைச்சர் ஜெயலலிதாவும், மின் துறை அமைச்சரும் தங்கள் ஆட்சிக் காலத்தில் தமிழகத்தை மின்மிகை மாநிலமாக மாற்றி விட்டதாக பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள். இடைக்கால நிதிநிலை அறிக்கையில், கடந்த ஐந்து ஆண்டுகளில் புதிய திட்டங்களைச் செயல்படுத்தியதன் மூலமாக 4,455.50 மெகாவாட் உற்பத்தித் திறன் கிடைத்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.
கடந்த ஐந்தாண்டுகளில் புதிய திட்டங்களைச் செயல்படுத் தியதன் மூலமாக 4,455.50 மெகாவாட் மின் உற்பத்தி தமிழகத்திற்குக் கிடைத்திருக்கிறதா? அப்படி கிடைத்திருந்தால் எந்தெந்த மின் திட்டங்கள் மூலம் எத்தனை மெகாவாட் மின் உற்பத்தி கிடைத்தது? அந்த மின் உற்பத்தித் திட்டங்கள் எந்த ஆட்சிக் காலத்திலே எப்போது தொடங்கப் பட்டன? உண்மையில் அவை அ.தி.மு.க.வின் கடந்த ஐந்தாண்டுகளில் தொடங்கப்பட்ட திட்டமா? என்பதை ஆதாரப்பூர்வமாக முதல்வரோ துறையின் அமைச்சரோ வெளிப்படையாகச் சொல்லத் தயாரா?
கடந்த ஐந்தாண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் (2011-2016) தொடங்கப்பட்ட திட்டங்களிலிருந்து ஒரு யூனிட் கூட மின்சாரம் கிடைக்கவில்லை. 5 ஆண்டுகளில் அறிவித்த எந்த மின் திட்டமும் தொடங்கப்படவில்லை. ஏற்கனவே அ.தி.மு.க. ஆட்சியில் இருந்த 2001-2006ஆம் ஆண்டுகளில் தொடங்கப்பட்ட திட்டங்களிலிருந்து வெறும் 27 மெகாவாட் மின்சாரம் மட்டுமே கிடைத்துள்ளது. எஞ்சிய 4,428 மெகாவாட் மின்சாரம், தி.மு. கழக ஆட்சியிலே தொடங்கப்பட்ட திட்டங்களிலிருந்தும், மத்திய அரசு திட்டங்களிலிருந்தும்தான் கிடைத்துள்ளது என்று கருணாநிதி கூறியுள்ளார்.