விரைவில் ‘உயிரினும் மேலான கழக உடன்பிறப்புகளே’.. உற்சாகத்தில் திமுக தொண்டர்கள்
பல மாதங்களுக்குப் பிறகு தொண்டர்களைச் சந்தித்து உற்சாகமாகக் கையசைத்தார் கருணாநிதி
Recommended Video
சென்னை: கோபாலபுரத்தில் இருந்து மோடி கிளம்பிச் சென்ற பிறகு, வீட்டிற்கு வெளியே வந்து தொண்டர்களைப் பார்த்து கையசத்தார் கருணாநிதி. இது தொண்டர்களை மிகவும் உற்சாகப்படுத்தி உள்ளது.
திமுக தலைவர் கருணாநிதி கடந்த ஒருவருடமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இருக்கிறார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவருக்கு தற்போது வீட்டிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொற்றுநோய் அபாயம் காரணமாக யாரும் அவரை சந்திக்க அனுமதிக்கப்படவில்லை.
கடந்த செப்டம்பரில் அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் நெஞ்சுச்சளி அகற்றப்பட்டது. அதன்பின் சுவாசிப்பதற்கு எளிதாக தொண்டையில் துளையிடப்பட்டு ஸ்டெத்ராடமி என்கிற கருவி பொருத்தப்பட்டது. இதனால் கடந்த ஒரு வருடமாக கருணாநிதி வீட்டை விட்டு வெளியே வரவில்லை.
துவண்டுபோன தொண்டர்கள்
கருணாநிதி சட்டப்பேரவை வைரவிழா, முரசொலி பவளவிழா ஆகியவற்றில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விழாவில் கலந்துகொள்வது உடல்நிலைக்கு உகந்தது இல்லை என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியதால் அந்த விழாக்களில் அவர் பங்கேற்கவில்லை. 50 ஆண்டுகளுக்கும் மேலான கருணாநிதியின் அரசியல் குரல் இப்போது களத்தில் இல்லாததால் தொண்டர்கள் கவலையடைந்தனர்.
மருத்துவர்கள் மகிழ்ச்சி
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக கருணாநிதி உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வந்தது. இதனால் தொடர்ந்து புகைப்படமும் அரசியல் தலைவர்களைச் சந்திக்கும் படங்களும் கோபாலபுரத்தில் இருந்து அணிவகுத்தன. இதனால் தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். வைகோ உள்ளிட்ட தலைவர்களையும் சந்தித்தார்.
மீண்டும் களத்தில் கருணாநிதி
கடந்த சில வாரங்களுக்கு முன்பு முரசொலி பவளவிழா அரங்கைக் காண அழைத்துவரப்பட்டார் கருணாநிதி. அங்கு முரசொலி கண்காட்சி அரங்கைப் பார்வையிட்டார். தனது கொள்ளுப்பேரன் திருமணத்தையும் நடத்தி வைத்தார். இது திமுக தொண்டர்களிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தி இருந்தது. கூடவே, பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸூம் கோபாலபுரம் வந்து கருணாநிதியைச் சந்தித்தார். இதனால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மோடி - கருணாநிதி சந்திப்பு
இன்று தினத்தந்தி பவளவிழாவிற்கு வருகை தந்த மோடி திடீரென கருணாநிதியை கோபாலபுரம் சென்று சந்தித்து உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். உடன் தமிழக ஆளுநர், பா.ஜ.க தலைவர்களும் இருந்தனர். இந்த சந்திப்பில் முரசொலி பவளவிழா மலர், குறளோவியம் புத்தகங்களை மோடிக்கு கருணாநிதிக்கு பரிசளித்தார்.
வெளியே வந்த கருணாநிதி
இதனால் கோபாலபுரத்தில் தொண்டர்கள் கருணாநிதியைக் காண்பதற்காக குவிந்தனர். மோடி கிளம்பிச் சென்ற பின்னர், ஸ்டாலினிடம் கருணாநிதியைப் பார்க்க வேண்டும் என்று தொண்டர்கள் கோரிக்கை வைத்தனர். உடனே சரியென, மாடிக்கு கிளம்பிச் சென்றார் ஸ்டாலின். கருணாநிதியிடம் சொல்லி, அவரை வீட்டு வாசலுக்கு அழைத்து வந்தார். வெளியே வந்த கருணாநிதி தொண்டர்களைப் பார்த்து உற்சாகமாக கையசைத்தார்.
தொண்டர்கள் மகிழ்ச்சி
இது தொண்டர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை கொடுத்தது. அவர் விரைவில் பழைய கருணாநிதியாக வரவேண்டும் என்பதே தொண்டர்களின் ஆசை. எங்களைப் பார்த்து கையசத்த அவர், விரைவில் அவரது கரகரப்பான குரலில் எங்களைப் பார்த்து ‘உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே' என்று சொல்லக்கூடிய நாள் வெகு தொலைவில் இல்லை. நாங்கள் அவரிடம் எதிர்பார்ப்பது அந்த ஒன்று தான் என்று தொண்டர்கள் நெகிழ்ந்து போய் இருக்கிறார்கள்.