ஞாயிறு போற்றுதும்... ஞாயிறு போற்றுதும்... கருணாநிதி, ஸ்டாலினின் யோகா பயிற்சி
சென்னை: சர்வதேச யோகா தினத்தை உலகம் முழுவதும் உற்சாகமாக யோகா பயிற்சி செய்து கொண்டாடியுள்ளனர். இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடி முதல் சாமான்ய மக்கள் வரை நேற்றைய தினம் யோகா பயிற்சி செய்தனர். தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும், தொண்டர்களும் பள்ளி மாணவர்களும் யோகா பயிற்சி செய்து யோகா தினத்தை கொண்டாடினர்.
திமுக தலைவர் கருணாநிதி தான் மேற்கொண்டு வரும் உடற்பயிற்சி பற்றியும், யோகா, மூச்சுப்பயிற்சி பற்றியும் தன்னுடைய முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். யோகா செய்வது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் யோகாதினத்தைப் பற்றியும், பல ஆண்டுகளாக தான் மேற்கொண்டு வரும் யோகா பயிற்சி பற்றியும் தன்னுடைய முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஸ்டாலின் தனது பதிவில், ஜூன் 21ம் தேதியை "சர்வதேச யோகா தினமாக" கடைப்பிடிக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா கொண்டு வந்த தீர்மானம் 177 நாடுகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது மனித குலத்தின் சிறந்த உடல்நலத்திற்கு வழி அமைத்துக் கொடுத்து, ஆரோக்கியமான வாழ்வுக்கு அடித்தளம் அமைத்துக் கொடுக்கும் பணியில் முக்கிய வெற்றியாகவே கருத வேண்டும்.
மக்களுக்கு பொதுச் சுகாதார சூழ்நிலைகளை ஏற்படுத்திக் கொடுப்பது அரசு நிர்வாகத்தின் முக்கிய அம்சம். ஆகவே, ஆரோக்கியமான மன நிலைக்கும், உற்சாகமான உடல் நலத்திற்கும் நாம் அனைவருமே முயற்சி செய்ய வேண்டும். அதற்கு யோகா கலை மிகவும் உதவிகரமாக இருக்கிறது. பல நூற்றாண்டுகளுக்கு முன்பே யோகா கலை இந்தியாவுக்குச் சொந்தமாக இருந்தாலும், இன்றைய தினம் உலக நாடுகளே யோகாவை ஏற்றுக் கொண்டு அந்த பயிற்சியில் ஈடுபடுகின்றன என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தி.
நான் பல வருடங்களாக யோகா பயிற்சி செய்து வருகிறேன். மனதிற்கு சமநிலை, சுறுசுறுப்பு, உடலுக்கு ஆரோக்கியம் போன்றவற்றை மனிதனுக்கு அளிக்கும் நேர்த்தியான பயிற்சி யோகா என்றே நான் நம்புகிறேன். பொது சுகாதாரம், உடல் நலம் போன்றவை மனிதகுலத்திற்கு இன்றியமையாதது என்பதில் மனதில் கொண்டு யோகா பயிற்சியை நம் வாழ்வில் ஒரு முக்கிய அங்கமாக கடைப்பிடிக்க ஜூன் 21-ஆம் தேதியான இன்று உறுதியேற்போம்.