திருவாரூர் தொகுதியில் கருணாநிதி 2 நாள் சுற்றுப்பயணம்- மீண்டும் அங்கே போட்டி?
சென்னை: திமுக தலைவர் கருணாநிதி தனது தொகுதியான திருவாரூர் தொகுதியில் வரும் 25, 26ம் தேதிகளில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க திருவாரூர் திமுகவினர் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
கருணாநிதியின் சுற்றுப் பயணம் குறித்து திமுக தலைமைக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
24-1-2016 (ஞாயிறு) - இரவு - சென்னையிலிருந்து புறப்படுதல் (ரயில் மூலம்)
25-1-2016 திங்கள்- காலை 7 மணி - திருவாரூர் - ரயிலடி வரவேற்பு,
25-1-2016 மாலை 6 மணி - வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் (திருவாரூர் தெற்கு வீதி).
26-1-2016 செவ்வாய் - காலை 9 மணி - தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட கட்டிடங்கள் திறப்பு.
26-1-2016 மாலை 6 மணி - கூத்தாநல்லூர் நகர திமுக அலுவலக கட்டிட திறப்பு.
26-1-2016 இரவு 10 மணி - சென்னை புறப்படுதல்.இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
கலைஞர் அறிவாலயத்தை திறந்து வைக்க வருகிற 26ம் தேதி கூத்தாநல்லூர் வரும் திமுக தலைவர் கருணாநிதிக்கு உற்சாக வரவேற்பு அளிப்பது என நகர திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் நகர திமுக செயல்வீரர்கள் கூட்டம் அவைத் தலைவர் பக்கிரிசாமி தலைமையில் நேற்று மாலை நடந்தது.
நகர செயலாளர் காதர் உசேன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.வரும் 25ம் தேதி மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க நாள் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக திருவாரூர் வரும் திமுக தலைவர் கருணாநிதிக்கு 50 வாகனங்களில் சென்று வரவேற்பு அளிப்பது.அதைத் தொடர்ந்து 26ம் தேதி கலைஞர் அறிவாலயத்தை திறந்து வைக்க கூத்தாநல்லூர் வரும் கருணாநிதிக்கு உற்சாக வரவேற்பு அளிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் திருவாரூர் தொகுதியில் கலைஞர் அறிவாலயம் திறந்து வைக்கச் செல்கிறார் கருணாநிதி. இதன் மூலம் திருவாரூர் தொகுதியில் கருணாநிதி மீண்டும் போட்டியிடலாம் என்று தெரிகிறது.