நம்பிக்கை தகர்கிறது.. உடனடியாக ஜல்லிக்கட்டு அனுமதியை அறிவிக்க வேண்டும்: கருணாநிதி
சென்னை: பொங்கல், தமிழர் திருநாள் நெருங்குவதால் உடனடியாக ஜல்லிக்கட்டு அனுமதியை அறிவிக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழர் திருநாள், பொங்கல் திருநாள் வருவதற்கு இன்னும் ஒரு சில நாட்களே இருக்கின்ற நிலையில், அத்திருநாளையொட்டி தமிழகத்தில் பல்லாண்டு காலமாக, தமிழர்களின் பண்டைய வீரத்தைப் பறைசாற்றும் பாரம்பரியமான "ஜல்லிக்கட்டு" தமிழகத்தில் நடைபெற்றே தீர வேண்டும் என்று தென் மாவட்டக் குழுவினர் தெரிவித்த போது, அவர்களின் போராட்டத்திற்கு கழகத்தின் சார்பில் ஆதரவளிப்பதாகத் தெரிவித்தேன்.
பின்னர் அந்தக் குழுவின் சார்பில் டெல்லியில் மத்திய அமைச்சர்களையும் சந்தித்து கோரிக்கை வைத்த போது, இந்த ஆண்டு "ஜல்லிக்கட்டு" விளையாட்டை நடத்த மத்திய அரசு அனுமதி வழங்கும், அதற்கான ஏற்பாடுகள் மத்திய அரசினால் செய்யப் பட்டு வருகின்றன என்றெல்லாம் உறுதி கூறப்பட்டது.

பொன்னாருக்கு பேக்ஸ்
23-12-2015 அன்று மாலையில் தமிழகத்தைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சர், பொன்.ராதா கிருஷ்ணனும் இந்த ஆண்டு பொங்கல் திருநாளையொட்டி ஜல்லிக்கட்டு நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஊடகங்களுக்கு பேட்டியளித்ததைக் கண்ட நான் அன்றையதினம் இரவே, அவருக்கு "பேக்ஸ்" மூலமாகத் தமிழக நிலைமைகளை விளக்கியதோடு, பிரதமரை நேரில் சந்தித்து, ஜல்லிக்கட்டு எந்தவிதமான இடையூறுமின்றி நடைபெறத் தேவையான முயற்சிகளனைத்தையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொண்டேன்.

பொன்னார் உறுதி
அந்தக் கடிதத்திற்கு அன்றிரவே பதில் எழுதிய மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், "ஜல்லிக்கட்டு" இந்த ஆண்டு நடைபெறுவதற்கு, தான் எடுத்துக் கொண்டிருக்கும் முயற்சிகளையும், மத்திய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளையும் விளக்கமாகத் தெரிவித்ததோடு, இந்த ஆண்டு பொங்கல் திருநாள் அன்று ஜல்லிக்கட்டு விளையாட்டை நடத்த அனுமதி பெற்று விடுவோம் என்கிற நம்பிக்கை தனக்கு உள்ளது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்வதாக விளக்கியிருந்தார்.

நம்பிக்கை தகர்ப்பு
மேலும் மத்திய அமைச்சர் ஜவடேகர், இந்த ஆண்டு "ஜல்லிக்கட்டு" வீர விளையாட்டை நடத்த மத்திய அரசு அனுமதி வழங்கும்" என்ற கூடுதல் நம்பிக்கையையும் வெளியிட்டிருந்தார். ஆனால் தற்போது டெல்லியிலிருந்து வெளிவரும் செய்திகள் நமது நம்பிக்கையைத் தகர்ப்பதாக உள்ளன.

சட்டம் இடம்தரவில்லை
மத்திய அரசு இதுபற்றி சட்ட வல்லுநர்களிடம் ஆலோசனை கேட்டதாகவும், மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்குவது சரியாக இருக்காது என்று எதிர்ப்பு தெரிவித்திருப்பதாகச் செய்தி வந்துள்ளது.

ஏமாற்றம்
தமிழ்நாடு ஜல்லிக்கட்டுப் பேரவைத் தலைவர் ராஜசேகரன் தலைமையிலான குழுவினர் டெல்லி சென்று ஏமாற்றத்தோடு மதுரை திரும்பி உள்ளார்கள். ஆனால் அந்தக் குழுவினரை மீண்டும் 4ஆம் தேதி டெல்லி வரும்படி அழைப்பு வந்துள்ளதாகவும் செய்தி வந்துள்ளது.

மீண்டும் நம்பிக்கை
மத்திய இணை அமைச்சர், பொன். ராதாகிருஷ்ணன் அளித்துள்ள பேட்டியில், "தமிழகத்தில் "ஜல்லிக்கட்டு" நடத்துவது பற்றி மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது, நான் சென்னைக்குப் புறப்படுவதற்கு முன்பு கூட துறை சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரைச் சந்தித்துப் பேசினேன்" என்றெல்லாம் இன்னமும் தொடர்ந்து நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கடிதத்தோடு கடமை முடிந்தது
ஆனால் தமிழகத்தை ஆளும் அரசோ, ஜல்லிக்கட்டு பற்றி மத்திய அரசுக்கு ஒரு கடிதம் எழுதியதோடு, தங்கள் பணி முடிந்து விட்டதாகக் கருதி வழக்கம் போலத் தூங்கிக் கொண்டிருக்கிறது. இதற்காக முதலமைச்சரோ அல்லது மூத்த அமைச்சரோ டெல்லி சென்று, பிரதமரைச் சந்தித்து, தமிழகத்தில் இந்த வீர விளையாட்டு நடைபெற எந்தவிதமான நடவடிக்கையும் முன்னெடுக்காதது மிகவும் கண்டிக்கத் தக்கதாகும்.

அறிவிப்புக்கு கோரிக்கை
எனவே பொங்கல் தமிழர் திருநாள் வருவதற்கு ஒருசில நாட்களே உள்ள நிலையில், மத்திய அரசு மேலும் தாமதம் செய்யாமல் உடனடியாக தமிழக மக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அறிவிப்பினை வெளியிட வேண்டுமென்று மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

தடையை மீறி போராட்டம்
இதனிடையே, மத்திய, மாநில அரசுகள் ஒத்துழைக்காவிட்டால், தடையை மீறி ஜல்லிக்கட்டை நடத்துவோம் என்று நாம் தமிழர் கட்சி அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications