ஜனாதிபதி தேர்தலில் சசிகலாவின் முடிவுக்கு கட்டுப்படுவேன்.. கருணாஸ் பேட்டி
சென்னை: குடியரசுத் தலைவர் தேர்தலில் அதிமுக அம்மா அணி பொதுச் செயலாளர் சசிகலாவின் முடிவை ஏற்பேன் என கருணாஸ் எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் பாஜக அறிவித்துள்ள வேட்பாளருக்கு முதல்வர் எடப்பாடி அணியும், ஓ.பன்னீர்செல்வம் அணியும் ஆதரவு தெரவிப்பதாக அறிவித்துள்ளன. இருவரும் தங்களது ஆதரவை நேரில் தெரிவிக்க தனித்தனியே டெல்லி சென்றுள்ளனர்.
ஆனால் டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 34 பேரும் பா.ஜ.க. வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு வாக்களிப்பார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஜனாதிபதி தேர்தலை பொறுத்தவரை எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப, தங்களுக்கு பிடித்தவருக்கு வாக்களிக்க முடியும். எனவே அவர்கள் ஆதரவு யாருக்கு என்பது குறித்து இன்னும் அறிவிக்கவில்லை.
இந்நிலையில் அதிமுகவின் கூட்டணியான முக்குலத்தோர் புலிப்படை கட்சி எம்எம்ஏ கருணாஸ் இன்று டிடிவி தினகரனை சந்தித்து பேசினார். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கருணாஸ், அதிமுக (அம்மா) துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை மரியாதை நிமர்த்தமாக சந்தித்துப் பேசினேன்.
உணவு சாப்பிடுவது என்பது மக்களின் தனிப்பட்ட விருப்பமாகும். எனவே, மாட்டிறைச்சி விவகாரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தோம். உடல்நிலை சரியில்லாததால் முதல்வர் நடத்திய இப்தார் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக டிடிவியிடம் எதுவும் பேசவில்லை; குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிப்பது குறித்து சசிகலாவின் முடிவுக்கு நான் கட்டுப்படுவேன் என்றார்.