சட்டசபையில் அரசுக்கு ஷாக் கொடுத்த கருணாஸ் உள்ளிட்ட மூவர் அணி!
Recommended Video
சென்னை: சட்டசபையில் இன்று ஆளுநர் உரையை புறக்கணித்து திமுக, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். அவர்களை போலவே இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கருணாஸ், தனியரசு மற்றும் தமிமுன் அன்சாரியும் வெளிநடப்பு செய்தனர்.
ஆளுநர் பன்வாரிலால் உரையுடன் ஆண்டின் முதல் சட்டசபை கூட்டம் இன்று தொடங்கியது.
ஆளுநர் உரை ஆரம்பித்ததுமே, எதிர்க்கட்சிகளான திமுக, காங்கிரஸ் உள்ளிட்டவற்றின் உறுப்பினர்கள் அவருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
வெளிநடப்பு
எதிர்க்கட்சிகள் கோஷங்களுக்கு நடுவேயும், ஆளுநர் தனது உரையை தொடர்ந்தார். இதையடுத்து காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மற்றும் திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இதன் பிறகு அவை அமைதியானது. ஆளுநர் அரசின் பல்வேறு திட்டங்களையும், முந்தைய சாதனைகளையும் தனது உரையில் குறிப்பிட்டார்.
இரட்டை இலை
இதனிடையே, எம்எல்ஏ தமிமுன் அன்சாரி, தனியரசு மற்றும் கருணாஸ் ஆகியோரும் ஆளுநர் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். இவர்களுக்கு இரட்டை இலையில் போட்டியிட மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாய்ப்பு வழங்கியிருந்தார்.
தினகரன், திமுகவுடன் நட்பு
முக்குலத்தோர் புலிப்படை என கருணாஸ் ஒரு கட்சியும், மனிதநேய ஜனநாயக கட்சி என தமிமுன் அன்சாரி, தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை என தனியரசு ஆகியோர் கட்சி வைத்திருந்தாலும், இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு இவர்கள் வெற்றி பெற்று சட்டசபை வந்தவர்கள். ஆனால், அதிமுகவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து வரும் இவர்கள் தினகரனுடனும், திமுக தலைமையிடமும் தொடர்பில் இருந்து வருகிறார்கள்.
சில நேரங்களில்
சில நேரங்களில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்தும் அவரை சந்தித்து வாழ்த்தியும் உள்ளனர். ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை ஒதுக்க அரசு ரூ.10 கோடி வழங்கியதற்கு நன்றி தெரிவித்திருந்தார்கள்.