நெடுவாசலில் களம் இறக்கப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய பாஜக கருப்பு முருகானந்தம்!
புதுக்கோட்டை: சர்ச்சைக்குரிய பாஜக பிரமுகர் கருப்பு முருகானந்தம் நெடுவாசல் போராட்டக் களத்தில் இறங்கியுள்ளது பலரையும் குழப்பியுள்ளது.
நான் தனிப்பட்ட முறையில் வரவில்லை. மாறாக பாஜக சார்பில்தான் வந்துள்ளேன் என்றும் பகிரங்கமாக கருப்பு முருகானந்தம் கூறியுள்ளார். இதனால் போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் முயற்சி ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்படுகிறதோ என்ற சந்தேகம் வலுத்துள்ளது.
மேலும் நெடுவாசல் மக்களுடன் பாஜக தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கருப்பு கூறியுள்ளார். இதன் மூலம் நெடுவாசல் போராட்டக் களத்தை சீர்குலைக்க பல்வேறு கட்சிகளும் முயல்வது தெளிவாகியுள்ளது.
தனி மனிதன் அல்ல
நெடுவாசலில் அவர் பேசுகையில், நான் தனிமனிதனாக முடிவெடுத்து வரவில்லை.. மத்தியில் ஆட்சி செய்து கொண்டிருக்கக்கூடிய, பாஜகவின் நிர்வாகியாகத்தான் வந்துள்ளேன். இந்த எரிவாயு திட்டம் தமிழக மக்களுக்கு, விவசாயத்துக்கு, விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக இருந்தால் இந்த திட்டம் செயல்படுத்தப்படமாட்டாது என்பதுதான் பாஜகவின் நிலைப்பாடு. இதைத்தான் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சரும் தெரிவித்துள்ளார்.
பாதிக்கும் என்றால் அனுமதி கொடுப்பார்களா
பாதிப்பு ஏற்படுத்துவதை உறுதி செய்யும் வகையில் ஆய்வு அறிக்கை தயாரித்து இருப்பதாக இந்தக் கிராமத்தைச் சேர்ந்த சிலர் என்னிடம் தெரிவித்துள்ளனர். இந்த திட்டம் விவசாயத்தை பாதிக்கும் என்று நான் நம்புகிறேன். அதேசமயம், இந்த திட்டம் எந்த அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று எந்த அரசியல்வாதிகளுக்குமே தெரியாது. தெரிந்திருந்தால் ஒரு நேரத்தில் இந்த திட்டத்துக்கு அனுமதி கொடுத்திருக்க மாட்டார்கள், ஆகையால், மீண்டும் ஆய்வு செய்து, மக்களிடம் கருத்து கேட்கப்படும். அப்போது, மக்கள் ஏற்கவில்லை என்றால் இந்த திட்டம் ரத்து செய்யப்படும்.
அறிவியல்பூர்வமாக சிந்தியுங்கள்
ஏதோ அரசியல் கட்சிகள் கூறுவதனால் போராட வேண்டாம். ஆக்கப்பூர்வமாக அறிவியல் பூர்வமாக பாதிப்பு இருக்கிறதா என்பதை சிந்தித்துப் பார்த்து தெளிவுபடுத்தி உறுதியாக இந்த திட்டம் வேண்டாம் என்று சொன்னால் கைவிட்டு விடுகிறோம் என்று மத்திய அமைச்சர் கூறி இருக்கிறார்.
பெட்ரோலியத் துறை அமைச்சரை சந்திப்போம்
நாளை மாலை 3 மணிக்கு மதுரையில் பாஜகவைச் சேர்ந்த தலைவர்களையும், மத்திய அமைச்சரையும் இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சந்திப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதல்கட்டமாக இந்த சந்திப்பின் மூலம் பாதிப்பை அவர்களிடம் தெரிவிக்கவுள்ளனர். 3 தினங்களுக்குள் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சரை சந்திக்கவும் பாதிப்பு ஏற்படுத்தும் என்பதை அறிந்து அதன் மூலம் இந்த திட்டத்தை ரத்து செய்து இப்பகுதியை பாதுகாக்க பாஜக அரசு உறுதுணையாக இருக்கும் என்றார் கருப்பு.
குழப்பம் வருமோ!
கருப்பு முருகானந்தம் முன்பு பல சர்ச்சைகளில் சிக்கியவர். இந்த நிலையில் அவர் நெடுவாசல் களத்தில் இறங்கியிருப்பது பலருக்கு பலவிதமான சந்தேகங்களை எழுப்பியுள்ளது என்பதை மறுக்க முடியாது. இவர் மட்டுமல்ல, பல்வேறு அரசியல் கட்சிகளும் உள்ளே புக ஆரம்பித்துள்ளனர். எனவே நெடுவாசல் போராட்டக்களத்தில் உள்ள மக்கள் தங்களது போராட்டம் மற்றும் நோக்கத்தில் தெளிவாக இருக்க வேண்டியது அவசியமாகியுள்ளது.