"கிழிஞ்சது கிருஷ்ணகிரி"... திமுக பாலம் என முத்திரை குத்தப்பட்டு கிடப்பில் போடப்பட்ட பாலம்!
கரூர்: கரூர் மாவட்டம் வாங்கல் கிராமம் நாமக்கல் மாவட்டம் மோகனூர் ஆகிய ஊர்களை இணைக்கும் காவிரியாற்றின் குறுக்கே பலமாதங்களாக கட்டப்பட்டு வரும் போக்குவரத்துக்கான மேம்பாலம் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கரூர் மாவட்டத்தின் காவிரி கரையோரம், நாமக்கல் மாவட்டம் காவேரி கரையோரம் பகுதியை சேர்ந்த மோகனூர் என்ற ஊரையும், கரூர் மாவட்டத்தின் காவிரி கரையோரம் உள்ள ஊர் வாங்கலையும் சுற்றிலும் பல்வேறு கிராம மக்கள் பெரும்பாலும் காவிரியின் கரையை சார்ந்து உள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் மோகனூர் அதன் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் மற்றும் கரூர் மாவட்டம் வாங்கல், வழியாக கரூருக்கும், கரூரில் இருந்து வாங்கல்-மோகனூர் வழியாக நாமக்கல்லுக்கு உள்ளிட்ட ஊர்களில் இருந்து பல்பேறு வேலை நிமித்தமாகவும், தொழில்ரிதியாகும் தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனா்.

ஆயிரக்கணக்கானோர்
அதேபோல கரூர் -நாமக்கல் ஆகிய இருமாவட்டங்களில் உள்ள கல்லூரிகளில் பயில தினசரி 1000-திற்க்கு மேற்ப்பட்டோர் அக்கறைக்கும், இக்கறைக்கும் தினமும் வந்து செல்கின்றனா். மேலும் நாமக்கல் மாவட்டம் மோகனூரிலிருந்து கரூரில் உள்ள ஜவுளி உற்பத்தி மற்றும் பஸ்பாடி பில்டா், கொசுவலை ஆகிய நிறுவனங்களில் வேலை பார்க்க தினமும் 500- மேற்பட்டோர் சென்று வருகின்றனா்.

3 கிலோமீட்டர் தூரம்தான்
வாங்கல் காவிரி ஆற்றின் மறுகரையில் உள்ள மோகனூருக்கும் உள்ள தொலைவு 3 கிலோமீட்டர் மட்டுமே. ஆனால், பாலம் இல்லாததால், கரூரில் இருந்து வேலாயுதம்பாளையம் வழியாக பரமத்திவேலூர் சென்று அங்கிருந்து மோகனூர் செல்லவேண்டிய நிலை ஏற்பட்டு தினமும் பொதுமக்கள், தொழிலாளா்கள் மாணவ- மாணவிகள் சுமார் 34 கிலோமீட்டர் சுற்றி சென்று வருகின்றனர். இதனால், நேரமும், செலவும் அதிகமாவதாக இருமாவட்டபொதுமக்கள் தெரிவித்தனர்.

இணைத்தால் நல்லது
வாங்கல் - மோகனூர் ஆகிய இருபகுதிகளை பகுதிகளை சார்ந்த பொதுமக்கள் காவிரி ஆற்றின் குறுக்கே போக்குவரத்துக்கு பாலம் கட்டித் தர வேண்டும் என நீண்ட நாள்களாக கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, 2009-ம் ஆண்டு திமுக ஆட்சியில் சுமார் 43 கோடி மதிப்பில் மோகனூர் - வாங்கல், இடையே போக்குவரத்துக்கான பால கட்டுமான பணிகள் தொடங்கின.

பாலம் ரெடி.. ஆனால் தூண் கட்டவில்லை!
காவிரியாற்றில் 1.4 கிலோமீட்டருக்கு இருவழிச்சாலையுடன் பாலமும். பாலத்தின் இருபுறமும் அணுகுச் சாலையும் அமைக்கத் திட்டமிடப்பட்டு 2013-ம் ஆண்டுக்குள் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டு பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தன. இந்நிலையில், 90 சதவீத பணிகள் நிறைவடைந்த நிலையில், கடந்த இராண்டுக்கும் மேலாக இந்த பாலத்தின் கட்டுமான பணிகள் நடைபெறவில்லை. இதையடுத்து, பொதுமக்கள் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு பல முறை கோரிக்கை விடுத்தும் பயனில்லை.

அபாயகரமான பயணம்
இதனால், தினமும் 1000-த்தும் அதிகமான பொதுமக்கள், மாணவர்கள், வேலைக்கு செல்வோர் காவிரியாற்றில் ரயில் பாலத்தில் ஆபத்தான நிலையில் சென்று வருகின்றனர். ரயில் பாலத்தில் கேபிளுக்காக விடப்பட்ட இடத்தில் அபாயகரமாக இரு சக்கர வாகனங்களையும் ஓட்டி வருகின்றனர். மேலும், இந்தப் பாலம் கட்டப்பட்டால், வாங்கல் - மோகனூர் உள்ளிட்ட காவிரி கரையோரம் உள்ள பல கிராம பொதுமக்கள் மட்டும் அல்லமால் தொட்டியம், முசிறி ,திருச்சி, ஆகிய ஊர்களுக்கும் எளிதாக சென்று வரமுடியும் என்றனர்.

திமுக பாலமாம்.. அதனால்தான் லேட்டாம்!
கடந்த திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட பாலம் என்பதால், 90 சத நிறைவடைந்த நிலையில், அரசியல் நோக்கத்துடன் இந்த பாலத்தின் கட்டுமான பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. எனவும் வரும் 2016 சட்டப்பேரவைத் தேர்தல் வரை இந்த பாலத்தின் பணிகள் தொடங்கப்படாது எனவும் அரசியல் பிரமுகா்கள் சிலர் தெரிவித்தனர்.

பல ஆயிரம் மக்கள் பலன் பெறுவார்கள்
இதுகுறித்து சிலா் பொதுமக்கள் கூறுகையில் வாங்கல்- மோகனூர் பாலம் கட்டி முடிக்கப்பட்டால் மோகனூர் பல இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் நல்ல பயனுள்ளதாக அமையும், மேலும் பல ஆயிரக்கணக்கான மக்கள் ரயில்வே பாலத்தில் செல்லுவதால் விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் இரண்டு சக்கர வாகனங்களில் சென்றால் எரிப்பொருள் மிச்சமாகும் எனவும் தெரிவித்தனா். எனவே தமிழக அரசு விரைந்து மேம்பால பணிகளை முடிக்கவேண்டும் என தெரிவித்தனா்.

ஆக மொத்தம் 3 காண்டிராக்டர்கள்!
இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரி ரவிகார்த்திகேயனிடம் கேட்டபோது, இந்த பால கட்டுமான பணிகளுக்காக முதலில் ஒப்பந்தம் எடுத்தவர் மிகவும் தாமதமாக பணிகளைச் செய்தார். இதனால், அந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. 2-வது வந்த ஒப்பந்ததாரரும் சரியில்லாத காரணத்தால், அவருடைய ஒப்பந்தமும் ரத்து செய்யப்பட்டது. இப்போது, எஞ்சியுள்ள பணிகளை விரைந்து முடிக்க 3- வதாக ஒப்பந்ததாரரை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றனர்.
கிழிஞ்சது கிருஷ்ணகிரி!












Click it and Unblock the Notifications