''ஞானப் பழம்..'' - வித்தியாசமாக விருப்ப மனு கொடுத்த காங். தொண்டர்!
சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவரிடம் கூடை நிறைய பழம் கொடுத்து தனக்கு சீட் தருமாறு கோரி விண்ணப்பத்தைக் கொடுத்தார் காங்கிரஸ்காரர் ஒருவர். அவரது வித்தியாசமான இந்த அணுகுமுறை அனைவரையும் கவர்ந்தது.
காங்கிரஸ் தலைமையகமான சென்னை சத்தியமூர்த்தி பவனில்தான் இந்தக் காட்சியை நேற்றுக் காண முடிந்தது.
மாநில சேவாதள ஒருங்கிணைப்பாளரான ராஜேஷ், கரூர் எம்.பி தொகுதியில் போட்டியிட விரும்பி இவ்வாறு நூதனமாக சீட் கேட்டு மனு கொடுத்தார்.
நெருங்கி வரும் தேர்தல்
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதிமுகவில் கடந்த மாதம் 19 ம் தேதி தொடங்கி 27 ம் தேதி வரையிலும், திமுகவில் 20 ம் தேதி தொடங்கி 30 ம் தேதி வரையிலும் விருப்பமனு தாக்கல் முடிவடைந்தது.
தேமுதிகவின் விருப்பம்
அடுத்து, தேமுதிகவில் கடந்த மாதம் 23 ம் தேதி தொடங்கிய விருப்ப மனுத் தாக்கல் ஞாயிற்றுக் கிழமை அன்று மாலை 4 மணியுடன் முடிவடைந்தது.
காங்கிரஸிலும் களை கட்டிய விருப்பம்
இந்த நிலையில் தமிழகத்தில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்புபவர்கள், பிப்ரவரி 10 ம் தேதி மாலை 3 மணியில் இருந்து, இரவு 8 மணி வரையிலும், 11 ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரையிலும், தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான, சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் விருப்ப மனுத்தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டது.
ரூ. 10,000 - ரூ. 5000
பொதுத் தொகுதிக்கான விண்ணப்ப கட்டணமாக ரூ.10 ஆயிரமும், தனி தொகுதிக்கு ரூ.5 ஆயிரமும் செலுத்த வேண்டும் நிபந்தனையை விதித்தது. இதனையடுத்து, காங்கிரஸ் சார்பில் விருப்பமனு தாக்கல் செய்யும் படலாம் துவங்கியது.
கரூரிலிருந்து ராஜேஷ்
இந்த நிலையில், மத்திய மண்டலமான கரூர் தொகுதியை குறிவைத்து , மாநில சேவாதள ஒருங்கிணைப்பாளர் ராஜேஸ் என்பவர் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார்.
தாம்பூழத் தட்டில் பழம்...
தனது வேட்பு மனுவை, ஒரு தாம்பூழதட்டில் வைத்து, அதில், ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை என பல்வேறு வகையான பழங்களை வைத்து , அதில் தனது தேர்தல் விருப்ப மனுவையும் கொடுத்துள்ளார். அதை ஆச்சயத்துடன் பார்த்து வாங்கிக் கொண்டாராம் ஞானதேசிகன்.
ஞானத்திற்கே பழமா....
அப்போது அருகில் இருந்த ஒருவர் , தலைவருக்கே ஒருவர் பழம் கொடுத்துவிட்டாரே என கமெண்ட் அடிக்க அந்த இடமே சிரிப்பலையில் மூழ்கியதாம்.
'ஞானத்திற்கே' பழமா...!