அரசியல் ரீதியில் எதிர்க்க திராணி இல்லாமல் வருமானவரி சோதனை...தினகரன் ஆதரவாளர் காசிநாதன் குற்றச்சாட்டு
Recommended Video
சென்னை : மத்திய அரசை எதிர்ப்பவர்களை வருமான வரி சோதனை மூலம் அச்சுறுத்தல் நடத்தப்படுவதாக தினகரன் ஆதரவாளரும் ஜெயா டிவியின் வழக்கறிஞருமான காசிநாதன் கூறியுள்ளார்.
சென்னை ஜெயா டிவி அலுவலகம், நமது எம்ஜிஆர் அலுவலகம் உள்பட சசிகலாவின் உறவினர்களின் அலுவலகங்கள், வீடுகள் உள்பட 100க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று காலை முதல் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. இந்த சோதனை குறித்து தினகரன் ஆதரவாளரும், ஜெயா டிவியின் வழக்கறிஞருமான காசிநாதன் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது: மத்திய அரசை எதிர்ப்பவர்களை வருமான வரி சோதனை மூலம் மிரட்டுவதை வழக்கமாக வைத்துள்ளதாக தெரிவித்தார். அரசியல் ரீதியில் எதிர்க்க திராணி இல்லாமல் வருமான வரி சோதனையை ஏவி விடுகின்றனர். வருமான வரி சோதனை பாஜகவின் கைப்பாவையாக செயல்படுகிறது.
வரி ஏய்ப்பு செய்திருந்தால் முதலில் நோட்டீஸ் கொடுத்துவிட்டு பின்னர் சோதனை நடத்தி இருக்க வேண்டும். ஆனால் எங்களை அடிபணிய வைத்துவிடலாம் என்ற எண்ணத்தில் வருமான வரி சோதனையை ஏவி விடுகின்றனர். இதற்கெல்லாம் நாங்கள் அஞ்ச மாட்டோம், வருமான வரித்துறையின் சோதனையை சட்ட ரீதியில் எதிர்கொள்வோம்.
தொழிலதிபர் சேகர் ரெட்டி வீட்டில் சோதனை நடந்த போது அதில் தற்போதைய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பெயர் அடிபட்டது. ஆனால் ஏன் அவர் வீட்டில் வருமான வரி சோதனை நடத்தவில்லை. மிரட்டினால் நாங்களும் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் போல அடிபணிந்துவிடுவோம் என்று நினைக்கிறார்கள் அது எப்போதும் நடக்காது என்று காசிநாதன் கூறியுள்ளார் .