சென்னையை ஸ்தம்பிக்க வைத்த விவசாயிகள் ஆதரவு.. பூட்டு போடும் போராட்டம்
சென்னை ஸ்தம்பிக்கும் வகையில் விவசாயிகளுக்கு ஆதரவான போராட்டத்தை இளைஞர்கள் மேற்கொண்டுள்ளனர்.
சென்னை: விவசாயிகளுக்கு ஆதரவாக கத்திப்பாரா மேம்பாலத்தை பூட்டி இளைஞர்கள் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
இதனால் சென்னையே ஸ்தம்பிக்கும் வகையில் வாகனங்கள் ஆங்காங்கே தேங்கி நிற்கின்றன.
வெளியூரில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் இந்த வழியாகத்தான் சென்னைக்குள் நுழையும். அதே போன்று சென்னையில் இருந்து அனைத்து வெளியூர் செல்லும் பேருந்துகளும் இந்த வழியாகத்தான் செல்லும்.
வெளியூர் பேருந்துகள்
இந்தப் போராட்டத்தால் அனைத்து வெளியூர் பேருந்துகளும் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ள பயணிகள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
விமான நிலையம்
அதே போன்று இந்த வழியாகத்தான் விமான நிலையத்திற்கு செல்லும் பேருந்துகள், கார்கள், 2 சக்கர வாகனங்கள் செல்லும். பீக் ஹவர் என்று சொல்லக் கூடிய இந்த நேரத்தில் மறியல் நடைபெற்றுள்ளதால் உரிய நேரத்தில் விமான நிலையத்திற்கு செல்ல முடியாத சூழலும் உருவாகியுள்ளது.
ஐடி நிறுவனங்கள்
இதே போன்று கிண்டி மற்றும் ஈக்காட்டுத்தாங்கல் பகுதியில் நிறைய ஐடி நிறுவனங்கள் உள்ளன. அந்த நிறுவனங்களுக்கு செல்லும் வாகனங்கள் பயணிகள் அனைவரும் சாலையில் காத்திருக்கிறார்கள்.
போக்குவரத்து முடக்கம்
இந்த திடீர் மறியலால் போக்குவரத்து கடுமையாக முடக்கப்பட்டிருக்கிறது. என்றாலும் இது விவசாயிகள் தொடர்பான பிரச்சனை என்பதால் பொதுமக்கள் முணுமுணுக்காமல் அமைதி காத்து வருகின்றனர்.