உங்க கேஸ் வேண்டாம்... விறகு அடுப்பே போதும்... கதிராமங்கலம் பெண்கள் நூதனப் போராட்டம்!
நாங்கள் சமைக்க கேஸ் வேண்டாம். விறகு அடுப்பிலேயே சமைத்துக்கொள்கிறோம் என கூறி கதிராமங்கலம் பெண்கள் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தஞ்சை: கதிராமங்கலத்தில் ஒ.என்.ஜி.சி நிறுவனத்துக்கு எதிராகப் போராடி வரும் மக்கள், 'எங்களுக்கு சமையல் கேஸ் வேண்டாம். விறகு அடுப்பிலேயே சமைத்துக் கொள்கிறோம்' என கூறி விறகு அடுப்பில் சமைத்து நூதனப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகில் உள்ள கதிராமங்கலத்தில் ஒ.என்.ஜி.சி நிறுவனம் எண்ணெய் எடுக்கிறோம் எனக் கூறி விவசாய நிலங்களில் குழாய்களை பதித்துள்ளது. ஆனால் அங்கு திடீரென தீப்பற்றியதால் பொதுமக்கள் பீதியடைந்து மாவட்ட ஆட்சியர் நேரில் வந்து இதற்கு விளக்கம் சொல்ல வேண்டும் என போராட்டம் நடத்தினர்.

ஆனால், போலீசார் அங்கு கலவரத்தைத் தூண்டி பொதுமக்கள் மீது தடியடி நடத்தினர். சட்டசபையில் முதல்வர் பழனிச்சாமி அதனை 'லேசான தடியடி நடத்தினர்' என போலீசாருக்கு ஆதரவாகப் பேசினார். மேலும், 'குழந்தைகளையும் பெண்களையும் வைத்து போராட்டம் செய்வது இப்போது பேஷனாகி விட்டது' என மக்களின் போராட்டங்களைக் கொச்சைப்படுத்தும் விதத்தில் பேசினார். இது அம்மக்களைக் கொதிப்படையச் செய்தது.
மேலும், போராட்டத்தின் போது 10 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களை விடுவிக்க வேண்டும் என கூறி கதிராரமங்கலம் மக்கள் தொடர்ந்து போராட்ட நடத்தி வருகின்றனர். இந்நிலையில், 'சமையலுக்கு கேஸ் பயன்படுத்துவதால் தானே, ஓ.என்.ஜி.சி நிறுவனம் எங்கள் ஊரில் குழாய்களைப் பதித்து எங்கள் வாழ்க்கையை அழித்து வருகிறது. எங்களுக்கு அந்த கேஸ் வேண்டாம் என கூறி, பெண்கள் அனைவரும் கதிராமங்கலத்தில் உள்ள அய்யனார் கோயிலில், விறகு அடுப்பில் சமைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு போராட்டம், கதிராமங்கலம் போராட்டம் என அனைத்து போராட்டங்களிலும் பெண்களே முன்நின்று போராடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications