ஓஎன்ஜிசிக்கு எதிர்ப்பு: 100-வது நாளை எட்டியது கதிராமங்கலம் மக்கள் அறவழிப் போராட்டம்!
கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி நிறுவனத்துக்கு எதிராக மக்கள் நடத்தி வரும் போராட்டம் இன்றுடன் நூறாவது நாளை எட்டியுள்ளது.
தஞ்சை: ஓ.என்.ஜி.சி நிறுவனத்துக்கு எதிராக கதிராமங்கலத்தில் நடைபெற்றுவரும் மக்கள் போராட்டம் இன்றுடன் 100ஆவது நாளை எட்டியுள்ளது.
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகில் உள்ள கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி நிறுவனம் எண்ணெய் எடுப்பதற்காக பதித்த குழாய்களில் திடீரென தீப்பற்றியது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என ஊர் மக்கள் விடுத்த கோரிக்கையால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டு அது பெரும் கலவரமாக மாறியது.

ஓஎன்ஜிசியே வெளியேறு
இதில் கதிராமங்கலத்தைச் சேர்ந்த 10 பேர் கைது செய்யப்பட்டனர். அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் ஓ.என்.ஜி.சி நிறுவனம் தங்கள் ஊரை விட்டு வெளியேற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஜூன் மாதம் 30ஆம் தேதியிலிருந்து போராட ஆரம்பித்தார்கள்.

ஆதரவு பெருகியது
கதிராமங்கலத்தைச் சேர்ந்த பெண்கள் பொது இடத்தில் விறகடுப்பில் உணவு சமைத்து சாப்பிட்டு போராடினார்கள். நாட்கள் செல்ல செல்ல, கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் கலந்துகொண்டனர். அதன் எதிரொலியாக சென்னை மெரினாவில் மாணவர்கள் போராட்டம் செய்வார்களோ என்கிற பதைபதைப்பில் அவ்வப்போது அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.

தலைவர்கள் முற்றுகை
கதிராமங்கலம் போராட்டம் தீவிரமடைந்த நிலையில் அங்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தேமுதிக தலைவர் விஜயகாந்த் உள்ளிட்ட தலைவர்கள் அங்கு சென்று மக்கள் போராட்டத்துக்கு ஆதரவு அளித்தனர். இந்நிலையில், போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட 10 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை மக்கள் மிகவும் வலியுறுத்தி போராடியதால், 42 நாள் சிறைவாசத்துக்குப் பிறகு கைது செய்யப்பட்டவர்கள் கடந்த ஆகஸ்டு 13ஆம் தேதி விடுவிக்கப்பட்டனர்.

100 நாட்களாக போராட்டம்
ஆனால், மக்கள் தொடர்ந்து 100ஆவது நாளாகப் போராடியும் கூட ஓ.என்.ஜி.சி நிறுவனம் இன்னும் கதிராமங்கலத்தை விட்டு வெளியேறவில்லை. மத்திய, மாநில அரசுகள் இந்த விஷயத்தில் பாராமுகமாக இருக்கின்றன. ஆனால் ஓ.என்.ஜி.சி நிறுவனம் வெளியேறும்வரை போராட்டம் தொடரும் என கதிராமங்கலம் மக்கள் தொடர்ந்து தங்கள் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications