எச்சரிக்கை.. தமிழகத்தில் இன்று முதல் கத்தரி வெயில்.. 26 நாட்களுக்கு சூரிய பகவான் சுட்டெரிப்பாராம்!
Recommended Video
சென்னை: தமிழகத்தில் இன்று முதல் வரும் 29ஆம் தேதி வரை 26 நாட்களுக்கு கத்தரி வெயில் நீடிக்கவுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் முதலே வெயிலின் தாக்கம் படிபடியாக அதிகரித்து வருகிறது. பகல் நேரங்களில் மக்கள் வெளியே செல்ல அச்சப்படும் அளவுக்கு அனல் காற்று வீசி வருகிறது.
குறிப்பாக கடந்த சில நாட்களாக சென்னை உட்பட தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் வெப்பத்தின் அளவு அதிகரித்து சதமடித்து வருகிறது. இந்நிலையில் கடந்த 3 நாட்களாக சென்னை உட்பட வட தமிழகத்தில் வெயில் தாக்கம் சற்று அதிகமாகவே உள்ளது.

இரவெல்லாம் அனல்
வங்கக்கடலில் உருவான ஃபனி புயலால் சென்னை உள்ளிட்ட வட மாநிலங்களில் மேகமூட்டம் காணப்பட்டாலும் புழுக்கமும் அனல் காற்றும் குறையவில்லை. நேற்று மற்றும் நேற்று முன்தினம் சென்னையில் இரவெல்லாம் சென்னையில் அனல் காற்று வீசியது.

வெயில் அதிகரிப்பு
இதனால் மக்கள் பெரும் தவிப்புக்கு ஆளாகினர். ஃபனி புயலால் தமிழகத்தில் மழை பெய்யும் வெயிலின் தாக்கம் குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் புயல் ஒடிசாவுக்கு சென்றதே வெயிலின் அளவு அதிகரிக்க காரணம் என கூறப்படுகிறது.

100 டிகிரிக்கு மேல் வெப்பம்
கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல இடங்களில் வெயில் 100 டிகிரிக்கு மேல் பதிவானது. நேற்று அதிகளவாக திருத்தணியில் 112 டிகிரி வெயில் பதிவானது.

கத்தரி வெயில்
இந்நிலையில் தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் என்னும் கத்தரி வெயில் இன்று தொடங்குகிறது. இந்த கத்தரி வெயில் வரும் 29ஆம் தேதி வரை நீடிக்கிறது. இதனால் இந்த காலக்கட்டத்தில் அனல் காற்று வீசுவதுடன் வழக்கத்தை விட வெப்பமும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

3 நாட்களுக்கு அனல்காற்று
தமிழகத்தின் குறிப்பிட்ட சில பகுதிகளில் அடுத்த 3 நாட்களுக்கு அனல்காற்று வீசக்கூடும் என்றும் சென்னை வானிலை மைய அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர். ஏற்கனவே வெயில் வாட்டி வதைக்கும் நிலையில் கத்தரி வெயில் தொடங்கியிருப்பது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications