தமிழ் மக்கள் வாழ்க.. மணக்க மணக்க வாழ்த்திய கட்ஜு!
தமிழ்நாட்டு மக்களின் ஜல்லிக்கட்டுப் போராட்டம் நாட்டுக்கே நல்ல பாடத்தைக் கற்றுக் கொடுத்துள்ளது என்று முன்னாள் சுப்ரீம் கோர்ட் நீதிபதி மார்க்கண்டே கட்ஜு கூறியுள்ளார்.
டெல்லி: தமிழ் மக்கள் ஒட்டுமொத்த நாட்டுக்கும் நல்ல பாடம் சொல்லிக்கொடுத்து விட்டனர். அவர்களைக் கண்டு பெருமைப்படுகிறேன். அவர்களது வருங்காலம் சிறக்கும், வாழ்க என்று கூறி வாயார வாழ்த்தியுள்ளார் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.
ஜல்லிக்கட்டு போர்க்களத்தில் கட்ஜுவும் ஒர் போர்வீரனாக தன்னைத் தானே அறிவித்துக் கொண்டு ஆரம்பம் முதலே தமிழ்நாட்டு மக்களுக்கு பல வகையிலும் தனது முக நூல் மூலமாக, டிவி பேட்டிகள் மூலமாக, ஆலோசனைகள், கருத்துக்களை, யோசனைகளைக் கூறி கொண்டே இருந்தார்.
ஏன் தமிழர்கள் அமைதியாக இருக்கிறர்கள். அவர்களுக்குக் கோபமே வராதா. உங்களது எம்.பிக்களைப் பிடித்துக் கேள்வி கேளுங்கள் என்று கூட அவர் ஒருமுறை ஆவேசமாக கூறியிருந்தார். இதுவும் கூட தமிழக இளைஞர்கள், மனதில் சிறு பொறியை பற்ற வைத்திருக்க உதவியிருக்கலாம். அந்த வகையில் கட்ஜூவும் கூட இந்த பெருமை மிக புரட்சிப் போராட்டத்தில் முக்கிய பங்குகொண்டவர்தான். காரணம், தேசிய அளவில் ஜல்லிக்கட்டு குறித்த விழிப்புணர்வுக்கான விதையைத் தூவியவர்களில் அவரையும் சேர்க்கலாம்.
இந்த நிலையில் தமிழ்நாட்டு மக்களை வாழ்த்தி ஒரு போஸ்ட் போட்டுள்ளார் கட்ஜு. அதில் அவர் கூறியிருப்பதாவது:
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் வென்ற தமிழ்நாடு மக்களுக்கு குறிப்பாக இளைஞர்களுக்கு எனது வாழ்த்துகள்.
இந்தப் போராட்டத்தின் முக்கியத்துவமே, அது மக்கள் போராட்டமாக இருந்ததுதான். ஜாதி, மதங்களைக் கடந்து அது மாபெரும் இயக்கமாக, அனைவரும் பேதமில்லாமல் ஒருங்கிணைந்ததுதான் இதன் மிகப் பெரிய முக்கிய அம்சம். அனைத்து நம்பிக்கைகளையும் தவிடுபொடியாக்கி நீங்கள் மிகப் பெரிய வெற்றியை ஈட்டியுள்ளீர்கள்.
ஒட்டுமொத்த தேசமும் உங்களிடமிருந்து கற்றுக் கொள்ளும்., உங்களது போராட்டத்தை உதாரணமாகக் கொண்டு சிறந்த நாட்டு மக்கள் சிறந்த வாழ்க்கையைப் பெறுவார்கள்.
தமிழ் மக்கள் வாழ்க என்று உணர்ச்சி பொங்க கூறியுள்ளார் கட்ஜு.