கீழடி ஆய்வை இழுத்து மூடவே பணியிட மாற்றம்… குமுறும் அகழ்வாய்வு கண்காணிப்பாளர் அமர்நாத்
கீழடி ஆய்வை இழுத்து மூடவே பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளேன் என்று கீழடி அகழ்வாய்வின் கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா குமுறியுள்ளார்.
மதுரை: கீழடியில் 2500 ஆண்டுகள் பழமை வாய்ந்த தமிழர்களின் பண்பாட்டு அடையாளங்களை தோண்டி எடுத்த குழுவின் தலைவராக இருந்த அமர்நாத் ராமகிருஷ்ணா, திடீர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். கீழடி ஆய்வை இழுத்து மூடவே இந்த இடமாற்றம் என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
மதுரை அருகில் கீழடியில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. 2 கட்டமாக நடைபெற்ற இந்த ஆய்வில் சுமார் 5300 பண்டைய பொருட்கள் கண்டறியப்பட்டன. மேலும், அகழாய்வு குழியின் இடை அடுக்கில் எடுக்கப்பட்ட பொருட்களில் நடத்தப்பட்ட கரிம பகுப்பாய்வு சோதனையில் கீழடி நகர நாகரீகம் கி.மு. 2ம் நூற்றாண்டுக்கு முந்தையது என்பது உறுதிபடுத்தப்பட்டது.
இதனையடுத்து 3ம் கட்ட பணிகளுக்கான நிதியை கேட்டு, அடுத்த கட்ட பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருந்த அமர்நாத் திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து அவர் நக்கீரன் இணையதளத்திற்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:

கூட்டோடு இடமாற்றம்
இந்த ஆய்வை இத்தோடு இழுத்து மூடுவதற்காகத்தான் என்னை பணியிட மாற்றம் செய்துள்ளனர். என்னை மட்டுமல்ல என்னைச் சேர்ந்த 25 பேரையும் பல்வேறு இடங்களுக்கு பணியிடம் மாற்றம் செய்துள்ளனர்.

வலுக்கட்டாயம்
பணியிட மாற்றம் குறித்து இந்திய தலைமை பொறுப்பாளர் ராகேஷ் திவாரியிடம் கேட்டேன். அதற்கு அவர், இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை பணியிடம் மாற்றப்படும். அந்த வகையில் மாற்றினோம். இது வழக்கமான இடமாறுதல்தான். இது எங்களோட விருப்பம். நீங்கள் அசாமில் போய் பணியில் சேருங்கள் என்றார். 3 வருடங்களாக நான் இங்கு உள்ளேன். வழக்கம்போல 2 வருடத்திற்கு ஒருமுறை மாற்ற வேண்டுமானால் கடந்த ஆண்டே என்னை மாற்றியிருக்க வேண்டும். ஏன் மாற்றவில்லை.

இழுத்து மூட…
மூன்றாம் கட்ட அகழாய்வு உடனடியாக தொடங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. அதற்கான நிதி மார்ச் 17ல் ஒதுக்கப்பட்டு வந்துவிடும் என்றார்கள். அதனை நம்பி நான் மூன்றாம் கட்ட அகழாய்வு பணிகளை தொடங்கிவிட்டேன். இந்த நிலையில் பணியிட மாற்றம் என்றால், இந்த வேலையை இழுத்து மூடுவதற்கான பணிகளை செய்கிறார்கள் என்று அர்த்தம்.

மனம் வலிக்கிறது…
எனக்கு பதில் ஸ்ரீராம் என்பவரை நியமித்துள்ளனர். அவர் இந்த அளவுக்கு உணர்வு பூர்வமாக செய்யமாட்டார். எனக்கு தெரியும். இந்தப் பணிகளுக்கான விஷயத்தை நானும், என்னோடு பணியாற்றி வந்த 25 பேர் கொண்ட குழுவும் நன்றாக தெரிந்து வைத்துள்ளோம். திடீரென வேறு குழுவை போட்டால் எப்படி பணி செய்ய முடியும். முழு மனதாக நான் இந்த பணியை விட்டு போகவில்லை. என் மனது வலிக்கிறது என்று கவலையுடன் அமர்நாத் கூறினார்.












Click it and Unblock the Notifications