அட்டப்பாடி பிரச்னையில் கேரளத்தை குற்றஞ்சாட்டக்கூடாது: வைகோ
ஈரோடு: அட்டப்பாடி பிரச்னையில் கேரளத்தை குற்றஞ்சாட்ட வேண்டாம் என்று மதிமுக பொதுச்செயலர் வைகோ கூறினார்.
மறைந்த மதிமுக தணிக்கைக்குழு உறுப்பினர் பூங்கொடி சாமிநாதனின் திருவுருவப்படத்தை, ஈரோட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் திறந்துவைத்து அவர் பேசியதாவது:
மதிமுகவில் கடைகோடி தொண்டனுக்கு பாதிப்பு ஏற்பட்டாலும் என் மனது வலிக்கும். 20 ஆண்டுகள் மதிமுகவுக்கு எத்தனையோ சோதனைகள், துன்பங்கள், தோல்விகள் வந்தபோதும் துவண்டுவிடாமல் கட்சிக்காக உழைப்பது தொண்டர்கள் தான். பூங்கொடி சாமிநாதன் நெஞ்சுவலியால் இறந்தார் என்பதை அறிந்ததும் என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அவரது மறைவு கட்சிக்கு மிகப்பெரிய இழப்பு என்றார்.

அட்டப்பாடி பிரச்னை தொடர்பாக மக்கள் சிவில் உரிமைக்கழகம் முழுமையாக ஆய்வு செய்துள்ளது. அந்த பதிவேடுகளை நானும் பார்த்தேன். அட்டப்பாடியில் தமிழர்கள் வெளியேற்றப்படுகிறார்கள் என்பதை ஏற்றுக்கொள்ளமாட்டேன்.
கேரள அரசு கொண்டுவந்துள்ள சட்டப்படி 5 ஏக்கருக்கு அதிகமாக இடம் வைத்திருந்தவர்கள் தான் வெளியேற்றப்பட்டுள்ளனர். இதில் சரிபாதி மலையாளிகளும் உள்ளனர்.பழங்குடி மக்களின் இடத்தை வெளிநபர்கள் தான் அதிகமாக வாங்கி சொகுசு மாளிகைகள், வீடுகள் கட்டியுள்ளனர். ஆனால், கேரளத்தை எதிர்க்க வேண்டும் என்ற ஒரே நோக்குடன் திமுக தலைவர் கருணாநிதி அறிக்கை விடுகிறார். ஆனால், முல்லை பெரியாறு, பவானி, அமராவதி பிரச்னைகளில் கேரளத்தை எதிர்த்து மதிமுக போராடி வருகிறது.
முள்ளிவாய்க்கால் முற்றத்தை இடித்தபோது போலீஸ் அரணை உடைத்தெறிந்து உள்ளே புகுந்தேன். தமிழகத்தின் வாழ்வாதாரத்துக்காக மதிமுக எதையும் தியாகம் செய்யும். மீனவர் படுகொலை செய்யப்படுவதை எதிர்த்து போராடுவோம்.காங்கிரஸ் கட்சியை மீண்டும் மத்தியில் ஆட்சி அமைக்க விடாமல் தடுக்க பணியாற்றி வருகிறோம்.
மத்தியில் இருந்து காங்கிரஸ் தூக்கி எறியப்படும். மீண்டும் தில்லி பக்கம் காங்கிரஸ் வரமுடியாது. மதிமுக ஒருபோதும் கொள்கையில் சமரசம் செய்தது இல்லை. கூண்டில் இருந்தாலும் புலி உறுமத்தான் செய்யும்.
ஈழத்தில் போர் முடியவில்லை. ஈழப் போராட்டம் புதிய பரிமானத்தை எட்டியுள்ளது. என் கண் முன்பு ஈழத்தை பார்க்க வேண்டும் என்று எண்ணுகிறேன். உலகில் விடுதலைக்காக ஆயுதம் ஏந்தி போராடிய தலைவர்களில் பிரபாகரன் போல யாரும் எதிர்ப்புகளை சந்தித்தது இல்லை.இந்தியா, இங்கிலாந்து, அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இஸ்ரேல், கியூபா ஆகிய பலமான நாடுகளின் ஆயுத உதவியுடன் இலங்கை ராணுவம், விடுதலைப் புலிகளுடன் போரிட்டது. இலங்கையில் நடந்தது போர் குற்றம் அல்ல. திட்டமிட்ட இனப்படுகொலை என தொடக்கத்தில் இருந்தே சொல்லி வருகிறேன்.ஜெர்மனி, அயர்லாந்து நாடுகளில் நடந்த தீர்ப்பாயங்களில் இலங்கையில் இனப்படுகொலை நடந்துள்ளது கூறப்பட்டுள்ளது. அடுத்த அமர்வில் இந்தியாவின் பங்களிப்பு என்ன என்பது குறித்த விவாதம் நடக்கும். இதில் நான் பங்கேற்று பேசுவேன் என்றார் வைகோ.
இக்கூட்டத்தில் மதிமுக அவைத் தலைவர் திருப்பூர் சு.துரைசாமி, மாநிலப் பொருளாளர் இரா.மாசிலாமணி, துணைப் பொதுச்செயலர் மல்லை சத்யா, ஈரோடு மக்களவைத் தொகுதி உறுப்பினர் அ.கணேசமூர்த்தி, உயர்நிலைக்குழு உறுப்பினர் நெல்லை ஜெபராஜ், ஈரோடு நகர செயலர் பொன்னுசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.












Click it and Unblock the Notifications