பிரியாணி கடையில் ரவுடித்தனம் செய்து சீன் போட்ட யுவராஜ் திமுகவை விட்டு சஸ்பெண்ட்!
பிரியாணி கடையில் பாக்ஸிங் செய்து சீன் போட்ட யுவராஜ் திமுகவிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
சென்னை: பிரியாணி கடையில் பிரியாணி தீர்ந்து விட்டது என்றதற்காக கடை ஊழியர்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்திய திமுகவின் யுவராஜ் உள்ளிட்ட 2 பேரை அக்கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
திமுக மாணவர் அணி நிர்வாகி யுவராஜ், திவாகர் ஆகியோர் கடந்த 28-ஆம் தேதி சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ஒரு பிரியாணி கடைக்கு தங்களது குண்டர்களுடன் சென்றிருந்தனர்.
அப்போது கடை மூடியிருந்தால் இவர்கள் கடையை திறக்குமாறு சொல்லியுள்ளனர். இதனால் ஊழியர்கள் கடையை திறந்தவுடன் பிரியாணி கேட்டனர். அதற்கு ஊழியர்கள் தீர்ந்துவிட்டது என்பதால்தான் கடையை மூடியுள்ளோம் என்று கூறியுள்ளனர்.
தாக்கி ஒரே ரவுடித்தனம்
அதற்கு இந்த குண்டர்கள் நாங்கள் திமுகவை சேர்ந்தவர்கள், எங்களுக்கே பிரியாணி இல்லை என்கிறீர்களா என்று கேட்டு அங்கிருந்த கேஷியர் முகத்தில் சரமாரியாக குத்தினர். இதை தடுக்க முயன்ற கடை ஊழியர்களையும் தாக்கி இவர்கள் அட்ராசிட்டி செய்தனர்.
வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்
இதனால் மக்களும், திமுக தொண்டர்களும் அதிருப்தி அடைந்தனர். அங்கு காவேரி மருத்துவமனையில் கருணாநிதிக்கு என்னவாச்சோ ஏதாச்சோ என்று தெரியாமல் சோறு தண்ணீரில்லாமல் இருந்த இடத்திலேயே இருக்கும் தொண்டர்கள் மத்தியில் கொஞ்சமும் கவலையின்றி பிரியாணிக்காக நியாயமே இல்லாமல் இவர்கள் தாக்குதல் நடத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.
தற்காலிக நீக்கம்
இது தொடர்பாக திமுக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன. இந்நிலையில் எதிர்பார்த்தபடியே குண்டர்கள் யுவராஜ், திவாகர் ஆகியோரை கட்சியிலிருந்து நீக்குவதாக தலைமை கழகம் அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பில் சென்னை தெற்கு மாவட்டம், விருகம்பாக்கம் வடக்கு பகுதியைச் சேர்ந்த யுவராஜ், திவாகர் ஆகியோர் கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
|
ஊறு விளைவிக்கும்
ஸ்டாலினும் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த குண்டர்களின் அநியாயத்தை கண்டித்துள்ளார். அவரது பதிவில் விருகம்பாக்கத்தில் உள்ள கடை உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. கழக கட்டுப்பாட்டை மீறியவர்கள் நீக்கப்பட்டுள்ளார்கள். கழக நற்பெயருக்கு ஊறு விளைவிக்கும் வகையில் யார் செயல்பட்டாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கிறேன்! என்று குறிப்பிட்டுள்ளார்.