தலித் இளைஞர் உடலை அடக்கம் செய்ய மறுத்து கிராம மக்கள் மறியல் போராட்டம்: போலீஸ் தடியடியால் பதற்றம் !
திருப்பூர்: உடுமலைப்பேட்டையில் பட்டப் பகலில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட தலித் இளைஞர் சங்கர் உடலை அடக்கம் செய்ய மறுத்து சுடுகாட்டில் அவரது உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பதற்றம் நிலவுவதால் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே குமரலிங்கம் கிராமத்தைச் சேர்ந்த வேலுச்சாமி என்பவரது மகன் சங்கர் (22). இவர், பொள்ளாச்சியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்தார். திண்டுக்கல் மாவட்டம், பழனியைச் சேர்ந்த சின்னச்சாமி என்பவரது மகள் கவுசல்யா (19). கடந்த சில மாதங்களுக்கு முன் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில் இந்த இளம் தம்பதியர் நேற்று உடுமைலையில் பொருள்கள் வாங்கிவிட்டு சாலையில் நடந்து வந்த போது, அங்கு வந்த கும்பல், இருவரையும் சரமாரியாக வெட்டியது. இதில் சங்கர் சம்பவ இடத்திலேயே இறந்தார். படுகாயமடைந்த கவுசல்யா கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதையடுத்து சங்கரின் உடல் பிரதேத பரிசோதனை செய்யப்பட்ட பின்னர் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனிடையே இந்த கொலை வழக்கில் தொடர்புடையோரை கைது செய்ய வலியுறுத்தி சங்கர் உடலை அடக்கம் செய்ய மறுப்புத் தெரிவித்து அவரது உறவினர்கள் சுடுகாட்டில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அங்கு பதற்றம் நிலவியது. போலீசாரின் சமர பேச்சை ஏற்க மறுத்ததால் சங்கர் உடல் குமரலிங்கத்தில் உள்ள அவரது வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டது. அப்போது கொமரலிங்கம் கிராம மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். இதனால் அந்த பகுதியில் பதற்றம் நிலவுவதால் அங்கு போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications