புதுச்சேரி ஆளுநராகிறார் கிரண் பேடி: குடியரசுத் தலைவர் உத்தரவு
புதுச்சேரி: புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் துணைநிலை ஆளுநராக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி கிரண் பேடி நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பிறப்பித்துள்ளார்.
மத்திய அரசின் பரிந்துரையின் அடிப்படையில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி புதுச்சேரியின் துணைநிலை ஆளுநராக கிரண் பேடியை நியமித்துள்ளதாக தெரிகிறது.
இந்தியாவின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரியும் ஊழலுக்கு எதிரான அண்ணா ஹசாரேயின் போராட்டங்களில் தீவிரமாகப் பங்கேற்றவருமான கிரண் பேடி 2 ஆண்டுகளுக்கு முன்பாக பாஜக-வில் சேர்ந்தார்.

டெல்லி சட்டசபை தேர்தலில் பாஜகவின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட கிரண்பேடி, தேர்தலில் போட்டியிட்டு படுதோல்வி அடைந்தார்.
புதுச்சேரி யூனியன் துணை நிலை ஆளுநராக இருந்த வீரேந்திர கட்டாரியா கடந்த 2014ம் ஆண்டு நீக்கப்பட்ட பின்னர் தனியாக துணைநிலை ஆளுநர் இதுவரை நியமிக்கப்படவில்லை, அந்தமான் நிகோபார் துணைநிலை ஆளுநர் ஏ.கே.சிங் கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்தார்.
புதுச்சேரியில் 17 இடங்கள் வெற்றியுடன் காங்கிரஸ்-திமுக கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றியுள்ள நிலையில் துணைநிலை ஆளுநராக புதிதாக கிரண் பேடி நியமிக்கப்பட்டுள்ளார்.
டெல்லியில் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கும் துணைநிலை ஆளுநருக்கும் கடும் மோதல் போக்கு இருந்து வரும் நிலையில் தற்போது கிரண் பேடி, புதுச்சேரி துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
புதுச்சேரியில் எப்படியாவது காலூன்ற வேண்டும் என்று நினைக்கும் பாஜக தற்போது முதல்வேலையாக பாஜக ஆதரவு ஆளுநரை களம் இறக்கியுள்ளது.காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடியை கொடுக்கும் வகையில் கிரண்பேடி நியமிக்கப்பட்டுள்ளாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
கிரண்பேடியின் நியமனம், புதுச்சேரியில் அமையவிருக்கும் புதிய ஆட்சியில் எந்த விதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது போகப் போகவே தெரியும் என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications