புதுவை மக்களின் ஒழுக்க நிலையை மாற்ற வேண்டும்.. ரஜினிக்கு கிரண் பேடி அழைப்பு
புதுச்சேரி: புதுச்சேரியில் மக்களின் ஒழுக்க நிலையை மாற்றுவதற்காக நடிகர் ரஜினியை விளம்பர தூதராக நியமிக்க விரும்புவதாக அம்மாநில துணை நிலை ஆளுநர் கிரண் பேடி தெரிவித்துள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் புதுச்சேரியின் துணை நிலை ஆளுநராக பதவியேற்றார் இந்தியாவின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரியான கிரண்பேடி. அது முதற்கொண்டு அங்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தும் முயற்சியை முடுக்கி விட்டுள்ளார் அவர்.
முன்னாதாக மக்களின் பொதுநலச் சேவைகளை ஊக்குவிக்கும் வகையில், கபாலி திரைப்படம் வெளியாவதற்கு முன்பாக அப்பட டிக்கெட்டுகளை பரிசாக வழங்கினார் கிரண் பேடி. அப்போது புதுவையின் விளம்பரத்தூதராக நடிகர் ரஜினியை நியமிக்க விரும்புவதாக அவர் கருத்துத் தெரிவித்தார்.

ரஜினி...
இந்நிலையில், தற்போது மீண்டும் அதே கருத்தை அவர் வலியுறுத்தியுள்ளார். புதுச்சேரி மக்களின் ஒழுக்க நிலையை மாற்றுவதற்காக நடிகர் ரஜினி காந்தை விளம்பர தூதராக நியமிக்க விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.

தொழில்துறை பாதையில்...
இது குறித்து செய்தியாளர்கள் மத்தியில் அவர் கூறுகையில், "இந்திய அரசு புதுச்சேரி மாநிலத்திற்கு தேவையான அனைத்தையும் வழங்கி இருக்கிறது. அதேபோல் தற்போது பொறுப்புகளையும் அளித்துள்ளது. நாங்கள் இனி தொழில்துறை பாதையில் பயணிக்க போகிறோம்.

ரியோ ஒலிம்பிக்...
ரியோ ஒலிம்பிக்கிற்கு செல்ல நாங்கள் திட்டமிட்டுள்ளோம். அதற்காக விளையாட்டுத் துறை அமைச்சரிடம் பேசியுள்ளோம். அவர் எங்களை விளையாட்டு கூட்டமைப்புடன் இணைப்பார்.

விளம்பரத் தூதர்...
மக்களின் ஒழுக்க நிலையை மாற்றுவதற்காக நடிகர் ரஜினியை விளம்பர தூதராக நியமிக்க விரும்புகிறோம். அவரது வேண்டுகோள்களும், செய்திகளும் புதுச்சேரியை ஆரோக்கியமானதாக மாற்றும்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications