ராட்டினம் உடைந்து ஒருவர் உயிரிழந்த வழக்கில் கிஷ்கிந்தா உரிமையாளர், மேலாளர் கைது
சென்னை: தாம்பரம் அருகேயுள்ள கிஷ்கிந்தா பொழுதுபோக்கு பூங்காவில் ராட்டினம் உடைந்து ஊழியர் ஒருவர் பலியான சம்பவம் தொடர்பாக உரிமையாளர் ஜோஸ்புனூஸ், மேலாளர் சக்திவேல் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
சென்னையை அடுத்த தாம்பரம் அருகே கிஷ்கிந்தா பொழுதுபோக்கு பூங்கா உள்ளது. இது நாட்டிலேயே சிறந்த முறையில் செயல்படும் பூங்காவிற்கான விருதினைப் பெற்றுள்ளது. இங்கு கோடை விடுமுறையையொட்டி சுற்றுலா பயணிகளை கவர ‘டிஸ்கோ' என்ற புதுவகை ராட்டினம் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த ராட்டினம் பயன்பாட்டில் இல்லை.

நேற்று மாலை பூங்கா நேரம் முடிந்ததும் ‘டிஸ்கோ' ராட்டினத்தை இயக்கி பார்க்க ஊழியர்கள் முடிவு செய்தனர். சுமார் 25 ஊழியர்கள் ராட்டினத்தில் அமர்ந்து இருந்தனர். ராட்டினம் வேகமாக சுழன்றபோது திடீரென 3 துண்டுகளாக உடைந்து விழுந்ததுக்குள்ளானது. இதில் 9 பேர் படுகாயமடைந்தனர். உடனடியாக அவர்களை மீட்டு தாம்பரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே குன்றத்தூரை அடுத்த புதுநல்லூரை சேர்ந்த மணி (வயது 25) என்பவர் பலியானார்.
இந்த விபத்து தொடர்பாக ‘கிஷ்கிந்தா' நிறுவனத்தின் உரிமையாளர் ஜோஸ்புனூஸ் மற்றும் மேலாளர் சக்திவேல் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். அஜாக்கிரதையாக இருந்த குற்றசாட்டின் கீழ் அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications