தாலியை அகற்றும் முன்பு கருப்பு சட்டையை அகற்ற தயாரா? வீரமணிக்கு கொங்குநாடு ஈஸ்வரன் கேள்வி
கோவை: தாலி கழற்றும் போராட்டத்திற்கு அழைப்புவிடுத்துள்ள திராவிடர் கழகத்திற்கு, கொங்கு நாடு தேசிய மக்கள் கட்சி பொதுச் செயலாளர் ஈஸ்வரன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கொ.ம.தே.க. பொது செயலாளர் ஈஸ்வரன் விடுத்துள்ள அறிக்கை:
திராவிடர் கழகத்தினர் வரும் 14ம் தேதி தாலி அறுக்கும் போராட்டம் நடத்துவதாக அறிவித்து இருப்பது சட்டம்- ஒழுங்கு பிரச்சினையை உருவாக்கும் உள்நோக்க செயலாகும். தமிழர் பண்பாட்டுக்கு எதிரான முறையினை ஏவ முயற்ச்சிக்கிறார்கள்.

தமிழகத்தில் 80 சதவீத திருமண பெண்கள் தாலி அணிந்திருக்கிறார்கள். தாலியை அறுப்போம் என்பது மோசமான விளைவை ஏற்படுத்தும். தாலி என்பது திருமணம் ஆன பெண் என்று மற்றவர்கள் மரியாதையோடு அடையாளப்படுத்தவதற்கு அது உதவும்.
திடாவிடர் கழகத்தினர் கி.வீரமணி மற்றும் அவரது ஆதரவாளர்கள் கறுப்பு சட்டை அணிவது ஏன்? உங்களை நீங்கள் திராவிடர்கள் என்று அடையாளப்படுத்தி கொள்ள தானே? அதை கழற்றுங்கள் என்று சொன்னால் உங்கள் உரிமை என்று சொல்ல மாட்டீர்களா?
தமிழர் மொழியை காப்பாற்றுவது உங்கள் கொள்கை என்று சொல்லும் திராவிடர்கள், தமிழர் பண்பாட்டை அழிக்க முயற்சிப்பது ஏன்? தமிழ் மொழியும் தமிழர் பண்பாடும் காக்கப்பட்டால் தான் தமிழ் மொழி பாதுகாப்பாக இருக்கும்.
மேலும், அருந்ததியர் பிற்பட்ட சமுதாய இட ஒதுக்கீட்டில் அருந்ததியருக்கான உள் ஒதுக்கீட்டை புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தொடர்ந்து எதிர்த்து வருகிறார். தாழ்த்தப்பட்ட சமுதாய மக்கள் தொகையில் அருந்ததியர் 3-ல் ஒரு பங்கு உள்ளனர். அப்படி பார்த்தால் அவர்களுக்கு 6 சதவீதத்திற்கு மேல் ஒதுக்க வேண்டும். இதை டாக்டர் கிருஷ்ணசாமி புரிந்து கொண்டு அருந்ததி சமுதாயத்திற்கு எதிரான வழக்கை கைவிட வேண்டும். அவர்களின் உரிமைகளை பறிக்க நினைக்கும் டாக்டர் கிருஷ்ணசாமிக்கு கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது. தேவை ஏற்பட்டால் அருந்ததி சமுதாயத்திற்காக டாக்டர் கிருஷ்ண சாமியை எதிர்த்து போராட்டமும் நடத்த தயார். இவ்வாறு ஈஸ்வரன் வெளியிட்ட அறிக்கையில் கூறி உள்ளனர்.












Click it and Unblock the Notifications