கொடநாடு எஸ்டேட் ஊழியர் தூக்கிட்டு தற்கொலை.. பெரும் பரபரப்பு !
கோவை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் கம்ப்யூட்டர் ஆப்பரேட்டராக பணிபுரிந்து வந்த தினேஷ்குமார் என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கொடநாட்டில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான எஸ்டேட் உள்ளது. இங்குள்ள பங்களாவில் கடந்த ஏப்ரல் மாதம் கொலை மற்றும் கொள்ளை நடைபெற்றது.

இந்த சம்பவத்தின் பரபரப்பு இன்னும் அடங்காத நிலையில் அந்த எஸ்டேட்டில் கடந்த 6 ஆண்டுகளாக கம்யூட்டர் ஆப்பரேட்டராக பணியாற்றி வந்த தினேஷ்குமார் என்பவர் தனது வீட்டில் இன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
கோத்தகிரி அருகே உள்ள கெங்கரை கிராமத்தைச் சேர்ந்த அந்த இளைஞருக்கு 29 வயது ஆகியுள்ளது. கடந்த சில தினங்களாக கண்பார்வை குறைவால் பாதிக்கப்பட்டிருந்த தினேஷ்குமார் கோவையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்த நிலையில் இன்று திடீரென தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த சாவில் மர்மம் இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து கோத்தகிரி சோலுர் மட்டம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இறந்த தினேஷ் குமாரின் உடல் கோத்தகிரி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைகாக வைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த ஏப்ரல் 24ம் தேதி கொடநாடு எஸ்டேட்டில் காவலாளி ஓம் பகதூர் என்பவரை கொலை செய்துவிட்டு அங்கிருந்த பொருட்களை ஒரு கும்பல் கொள்ளையடித்துச் சென்றது. இதுதொடர்பாக இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இருப்பினும் அந்த கொலை எதற்காக நடந்தது என்பதற்கான தெளிவான காரணம் இன்னும் வெளிவரவில்லை. அதற்குள் மேலும் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications