கொடநாடு கொள்ளையில் மர வியாபாரி சஜீவனுக்கு தொடர்பு? - துபாயில் பதுங்கியவரை நெருங்கும் போலீஸ்
கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கில் மரக்கடை வியாபாரி சஜீவன் என்பவருக்கு முக்கிய தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
நீலகிரி: கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு திகில் கதை போல நீண்டு கொண்டே இருக்கிறது. இந்த கொலை, கொள்ளையில் கூடலூரைச் சேர்ந்த மர வியாபாரிக்கு தொடர்பு இருப்பதாக போலீஸ் சந்தேகிக்கிறது.
கொடநாடு பங்களாவில் எந்த அறையில் எந்த மாதிரியாக பீரோ இருக்கிறது என்றும், அதற்கு எந்த மாதிரியான சாவி உபயோகிப்பார்கள் என்றும் அந்த மர வியாபாரிக்கு அத்துப்படியாம்.
சஜீவனிடம் நட்பாக பழகிவந்த சயான், டிரைவர் கனகராஜ் ஆகியோருக்கும் கொடநாடு பங்களாவின் அனைத்து அறைகளும் நன்கு தெரிந்திருகிறது. எனவேதான் எந்த கேட் வழியாக சென்றால் ஈசியாக கொள்ளையடித்துக்கொண்டு வரலாம் என்று திட்டமிட்டு சென்றுள்ளனர் என்று போலீசார் கூறி வருகின்றனர்.

சசிகலா உடன் நட்பு
கொடநாடு பங்களாவில் உள் அலங்கார மர வேலைகளை செய்த சஜீவனுக்கும், சசிகலாவின் நெருங்கிய உறவினருக்கும் நட்பு உருவாகி அது சசிகலா வரை நீடித்துள்ளது. அந்த செல்வாக்கில்தான் அவர் எந்த தடையும் இன்றி கொடநாடு எஸ்டேட்டிற்குள் உலா வந்தாராம்.

விலை உயர்ந்த மரங்கள்
வனப்பகுதியில் இருந்து விலை உயர்ந்த மரங்களை எந்த தடையும் இன்றி வெட்டி, மர வேலைகள் செய்து விற்பனை செய்து வந்தாராம் சஜீவன். வெளிநாட்டிலும் தனது வியாபாரத்தை விரிவு படுத்தியுள்ளார். கொடநாடு கொள்ளை சம்பவங்கள் அரங்கேறுவதற்கு சில நாட்களுக்கு முன்புதான் அவர் துபாய் சென்று விட்டாராம்.

டூப்ளிகேட் சாவி
கொடநாடு பங்களாவின் ஒரு அறையில்தான் ஜெயலலிதாவின் உயிலும் மற்ற ஆவணங்களும் சூட்கேசில் வைத்து வைக்கப்பட்டு இருந்தது. இது எந்த அறையில் எப்படிப்பட்ட பாதுகாக்கப்பட்ட பீரோவில் வைக்கப்பட்டிருக்கும், அதற்கான சாவி எப்படி இருக்கும் என்பது முதற்கொண்டு சஜீவனுக்கு தெரியும் என்கிறார்கள். சாவி செய்தவர் அதற்கான டூப்ளிகேட் சாவியும் வைத்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரிக்கின்றனர்.

சந்தேக ரேகை
தினகரன் விசாரணைக்காக டெல்லி சென்ற பின்னர்தான், இந்த பங்களாவில் கொள்ளை முயற்சியும் நடந்துள்ளது. இந்த கொள்ளைக்குப் பின்னணியில் சஜீவன்தான் இருக்கிறார் என்ற சந்தேகமும் போலீசார் மத்தியில் வலுவடைந்துள்ளது. மேலும் கடந்த 2011ஆம் ஆண்டு கொங்கு மண்டலத்தில் அதிகார மையமாக திகழ்ந்த அந்த நபரிடமும் விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்துள்ளது.












Click it and Unblock the Notifications