பயனற்று கிடக்கும் கோடநாடு “பைனாகுலர்”... பயன்தருமா சுற்றுலாபயணிகளுக்கு?
கோத்தகிரி: கோத்தகிரி கோடநாடு காட்சிமுனையில் உள்ள "பைனாகுலர்" பயனற்று மூடி வைக்கப்பட்டுள்ளதால் இயற்கை காட்சிகளை காண முடியாமல் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்து வருகின்றனர்.
கோத்தகிரியில் இருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது கோடநாடு காட்சிமுனை. உலக சுற்றுலா வரைப்படத்தில் முக்கிய பங்கு வகித்துள்ள இக்காட்சி முனை போதிய விளம்பரம் இல்லாமல் உள்ளது.
முக்கியத்துவம் வாய்ந்த இக்காட்சிமுனையில் இருந்து பார்த்தால் நீலகிரி மாவட்டத்துக்கு சொந்தமான சமவெளி பகுதியில் அமைந்துள்ள தெங்குமரஹாடா கிராமத்தை கண்டுகளிக்க முடியும்.கர்நாடக மாநிலத்தை ஒட்டி வரலாற்று சிறப்புமிக்க அல்லிராணி கோட்டை மாயார் ஆற்று உள்ளிட்ட மலை மாவட்டத்தில் உற்பத்தியாகி வளைந்து நெளிந்து சங்கமமாகும் பவானிசாகர் அணையின் முழுத்தோற்றம் கண்களுக்கு விருந்தாக அமையும்.
இதைதவிர ரங்கசாமி பில்லர் மலைமுகடுகளுக்கு இடையே வெள்ளியை உருக்கியது போல் ரம்மியமாக கொட்டும் சிற்றோடைகள் பசுமையான சோலைகள் தேயிலை தோட்டங்கள் என இயற்கை அழகுக்கு பஞ்சமில்லை.
இத்தகைய இயற்கை அழகு காட்சிகளை கண்களுக்கு மிக அருகே கொண்டுவந்து காட்டும் "அதிநவீன பைனாகுலர்' அமைக்கப்பட்டு அதன் மூலம் சுற்றுலாப் பயணிகள் பயனடைந்து வந்தனர்.தற்போது பைனாகுலர் பழுடைந்த நிலையில் கண்ணாடி அறைக்குள் மூடி வைக்கப்பட்டு காட்சி பொருளாகவே மாறியுள்ளது. இது சுற்றுப்பயணிகளுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.இதன் காரணமாகவே ஆண்டுதோறும் நடைபெறும் கோடை சீசன் நாட்களில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது.தவிர "கோடநாடு காட்சிமுனை குறித்து போதிய விளம்பரங்கள் இல்லாததே சுற்றுலாப் பயணிகள் குறைய காரணம்" எனவும் கூறப்படுகிறது.
எனவே அதிமுக்கியமான சுற்றுலா மையமான கோடநாடு காட்சிமுனையை சிறந்த பொழுதுபோக்கு அம்சங்களுடன் புனரமைத்து இயற்கையை கண்டுக்களிக்க புதிய பைனாகுலர் பொருத்தி சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் வகையிலான மாற்றங்களை செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுப்பது அவசியம்.