தந்தையின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்த சினிமா ஹீரோ
திருச்சி : தன்னை விட 10 வயது அதிகமான பெண்ணை காதல் திருமணம் செய்து கொண்டதாகவும், மாய வலையில் விழுந்த எனது மகன் விபரம் தெரிந்த பிறகு மீண்டும் என்னிடம் வந்து சேர்வான் என்று கூறியுள்ளார் கோலாகலம் படத்தின் ஹீரோ மலையமானின் தந்தை சுரேந்திரன்.
திருச்சி கே.கே.நகர் ராணி அண்ணாத்துரை தெருவைச் சேர்ந்தவர் சுரேந்திரன் ,50. இவர் கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிறார். கோலாகலம் என்ற படத்தை தயாரித்து இயக்கினார். இவரது மகன் மலையமான் ,25. கோலாகலம் படத்தின் ஹீரோவாக நடித்தார்.
இவருக்கும், திருச்சி தீரன் நகரைச் சேர்ந்த அமுதாவின் மகள் தீபாவுக்கும் இடையே காதல் ஏற்பட்டது.மலையமானை விட தீபா 10 வயது அதிகம் என்பதாலும், வேற்று சமூகத்தினரைச் சேர்ந்தவர் என்பதாலும், இவர்களது காதலுக்கு சுரேந்திரன் எதிர்ப்பு தெரிவித்தார்.
தனது தந்தையின் எதிர்ப்பையும் மீறி அமுதாவை திருமணம் செய்ய முடிவு செய்து திருமண பத்திரிக்கையும் அடித்துள்ளார். இதனை கண்ட சுரேந்திரன், தனது மகனை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைக்கிறார்கள் என்று பெண் வீட்டார் பற்றி கே.கே.நகர் போலீசில் புகார் தெரிவித்தார்.
புகாரை அடுத்து இருவரையும் அழைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது விசாரணையில் அவர்கள் இருவரும் மேஜர் என்பது தெரியவர அவர்களது திருமணத்தை தடுத்து நிறுத்தமுடியவில்லை.
மலையமான் மற்றும் தீபா திருமண ஏற்பாடுகள் ஞாயிறன்று தடபுடலாக நடந்தது. எப்படியாவது இந்த திருமணத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்று எண்ணிய சுரேந்திரன் திருச்சி மாநகர் போலீஸ் கமிஷனரிடம் மீண்டும் புகார் கொடுத்தார். ஆனால் திருமணத்தை தடுத்து நிறுத்தமுடியவில்லை. இதைத் தொடர்ந்து மலையமான் மற்றும் தீபா திருமணம் திட்டமிட்டப்படி ஞாயிறன்று நடந்து முடிந்தது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சுரேந்திரன், கோலாகலம் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான எனது மகன் மலையமான், 10 வயது மூத்த பெண்ணை திருமணம் செய்ய முடிவு செய்தார். இதற்கு நான் சம்மதிக்கவில்லை.
எனது மகனை கடத்தி வீட்டு சிறையில் வைத்து திருமணம் திருமணம் நடத்தி உள்ளனர். மாய வலையில் விழுந்த எனது மகன் விபரம் தெரிந்த பிறகு மீண்டும் என்னிடம் வந்து சேர்வான் என்று கூறியுள்ளார் சுரேந்திரன்.
ஆனால் திருமணம் செய்த மலையமானோ, நானாக விரும்பி, காதலித்த பெண்ணை திருமணம் செய்துள்ளேன். அவருக்கும், எனக்கும் மூன்று வயது தான் வித்தியாசம் என்று கூறியுள்ளார். காதல் கண்ணை மறைத்ததா? பாசம் கண்ணை மறைக்கிறதா தெரியலையே.