மதுரை செல்ல கொளத்தூர் மணிக்கு திடீர் தடை.. திண்டுக்கல் அருகே நடுரோட்டில் தடுத்து நிறுத்தி கைது!
வழக்கறிஞர் உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்க மதுரைக்குப் புறப்பட்ட கொளத்தூர் மணி திண்டுக்கல்லில் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
திண்டுக்கல்: போராட்டத்தில் பங்கேற்க மதுரைக்குப் புறப்பட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி திண்டுக்கல் அருகே அம்மையநாயக்கனூரில் தடுத்து நிறுத்தி கைது செய்யப்பட்டார்.
மதுரையில், தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும் என்று கோரி வழக்கறிஞர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்தில் பங்கேற்க கொளத்தூர் மணி மதுரைக்குப் புறப்பட்டார். திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர் அருகில் காலை 11 மணிக்கு அவர் தடுத்து நிறுத்தப்பட்டார்.
சுமார் 5 ஆண்டுகளுக்கு முன், ஒரு நிகழ்ச்சியில் பேசிய போது கொளத்தூர் மணி முத்துராமலிங்கத் தேவரை விமர்சனம் செய்திருந்தார். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவியதால் ஜாதி அமைப்புகளுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் கொளத்தூர் மணியைப் படுமோசமாக ஜாதிய அமைப்புகள் திட்டித் தீர்த்து வருகின்றன.
மதுரைக்கு செல்லத் திடீர் தடை
இந்நிலையில், அவர் மதுரை சென்று உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்கிறார் என்ற தகவல் தெரிந்த உடன் ஜாதிய அமைப்புகள் அவர் மதுரைக்கு வரக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தின. இதனைச் சமாளிக்க, கொளத்தூர் மணி மதுரைக்குச் செல்ல தடை போட்டனர் போலீசார்.
போலீசாருடன் வாக்குவாதம்
அம்மையநாயக்கனூரில் கொளத்தூர் மணி தடுத்து நிறுத்தப்பட்ட உடன், தனக்குப் பாதுகாப்பு தரும் ஆற்றல் போலீசாருக்கு இல்லை என்று கூறினால் திண்டுக்கல்லில் இருந்து திரும்பி சென்றுவிடுவதாக கொளத்தூர் மணி போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
பதற்றம் அதிகரிப்பு
இதற்கு உறுதி தரப்படவில்லை என்றால் தடையை மீறி மதுரைக்குச் செல்வேன் என்றும் கொளத்தூர் மணி எச்சரித்தார். இதனால் என்ன செய்வது என்று தெரியாத போலீசார் கொளத்தூர் மணியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்குப் பதற்றம் அதிகரித்தது.
கொளத்தூர் மணி கைது
இதனைத் தொடர்ந்து 4 மணி நேரம் அம்மையநாயக்கனூர் சாலையிலேயே கொளத்தூர் மணி தடுத்து நிறுத்தப்பட்டிருந்தார். பின்னர் எந்த முடிவையும் எடுக்க முடியாமல் திணறிய போலீசார் கொளத்தூர் மணியைக் கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது.