சசிகலா நடராஜன் கட்டுப்பாட்டில் இருந்து மெல்ல விலகும் 'கொங்குமண்டல' அதிமுக எம்.எல்.ஏ.க்கள்?
சென்னை: அதிமுகவை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் சசிகலா நடராஜனின் பிடியில் இருந்து கொங்குமண்டலத்தைச் சேர்ந்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மெல்ல மெல்ல விலகிவருவதாக கூறப்படுகிறது.
முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரது தோழி சசிகலா நடராஜன்தான் அதிமுகவையும் அரசாங்கத்தையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். அதிமுகவில் தற்போது எம்.எல்.ஏ.க்கள் ஜாதி மற்றும் மண்டலம் வாரியாக கைகோர்த்துள்ளனர்.
மணல் மன்னருக்காக...
முக்குலத்தோர் எம்.எல்.ஏ.க்கள் எப்போதும்போல சசிகலா நடராஜனின் முழு கட்டுப்பாட்டில் இருக்கின்றனராம். நாடார் சமூக எம்.எல்.ஏ.க்கள் அங்கிட்டு, இங்கிட்டு என 'மணல் மன்னரின்' கண்ணசைவுக்காக காத்திருக்கிறார்களாம். இவர்களில் சிலர் சசிகலா புஷ்பாவுடன் கை கோர்க்க கூடும் என கூறப்படுகிறது.
கொங்கு மண்டலத்தில் ஊசல்
அதிமுக ஆட்சி அமைக்க உறுதுணையாக இருந்த கொங்கு மண்டல எம்.எல்.ஏ.க்களோ மிகவும் ஊசலாட்டத்துடன் இருக்கிறார்களாம்... மத்தியில் ஆளும் பாஜக கொங்குமண்டல எம்.எல்.ஏ.க்களுக்கு வலைவிரித்திருப்பதால் சசிகலா தரப்பு கண்கொத்தி பாம்பாக அவர்களை கண்காணித்து வருகிறது.
எடப்பாடி பழனிச்சாமி
சசிகலாவின் நம்பிக்கைக்குரிய தளபதி எடப்பாடி பழனிச்சாமியின் இந்த கண்காணிப்பு வேலைக்கு தலைமை வகிக்கிறவர்.. எம்.எல்.ஏ.க்களின் அனைத்து நகர்வுகளும் மிகவும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு சென்னைக்கு உடனுக்குடன் தகவல்கள் அனுப்பப்படுகிறது.
தென்மாவட்ட மாஜி அமைச்சர்
மேலும் சில எம்.எல்.ஏ.க்களுடன் தனி அணிக்கு தயாராகி வரும் தென்மாவட்ட மாஜி அமைச்சர் மேலும் சில எம்.எல்.ஏ.க்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. அதிமுகவில் 2-ம் கட்ட தலைவர்கள் இல்லாத நிலையில்தான் இப்படி அணிகளாக அக்கட்சி பிரிந்து கிடக்கிறது என்கின்றனர் அரசியல்பார்வையாளர்கள்.