மீண்டும் மிரட்ட வரும் மழை... கோவை, நீலகிரியில் கனமழைக்கு வாய்ப்பு என அறிவிப்பு
கோவை, நீலகிரியில் கனமழை பெய்ய வாய்ப்பு என அறிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
சென்னை: அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதிலும், கோவை, நீலகிரி, இடியுடன் கூடிய மழை வெளுத்த கட்ட போவதாகவும் எச்சரிக்கை அறிவிப்பு தெரிவிக்கிறது.
தமிழகத்தில் ஏற்கனவே தென்மேற்கு பருவமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மழை கொட்டி வருகிறது. குறிப்பாக, கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதேபோல மேலும் சென்னை உள்ளிட்ட சில இடங்களிலும் அவ்வப்போது மழை தலைகாட்டி விட்டு போகிறது.
இந்நிலையில் மீண்டும் தமிழகம், புதுச்சேரியில் வெப்பச்சலனம் காரணமாக மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதில், கோவை, நீலகிரி மற்றும் புதுச்சேரிக்குத்தான் அதிக அளவு மழை பெய்ய வாய்ப்பு அதாவது இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் லேசான மழை பெய்யும் என்றும், வடக்கு மற்றும் மத்திய வங்ககடல் பகுதிக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் கேட்டுக் கொண்டுள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக வால்பாறையில் 3 செ.மீ மழையும், சின்னகல்லார், ஏற்காடு, மற்றும் நீலகிரியிலுள்ள நடுவட்டம் ஆகிய இடங்களில் 2 செ.மீ மழையும் பதிவாகி உள்ளது. மேலும் சேலம், ஆத்தூர், உதகை, பண்ருட்டி, ஓசூரில் 1 செ.மீ மழை பெய்துள்ளது.