தலைவராக துடிக்கும் ஸ்டாலின் வெளியேறினால்தான் திமுக வெல்லும்: கே.பி. ராமலிங்கம் காட்டம்!
சென்னை: திமுகவின் தலைவராவதற்கு துடித்துக் கொண்டிருக்கும் மு.க.ஸ்டாலின் தீவிர அரசியலைவிட்டே ஒதுங்கினால்தான் நிச்சயம் தேர்தல்களில் கட்சி வெல்லும் என்று சஸ்பென்ட் செய்யப்பட்ட ராஜ்யசபா எம்.பி. கே.பி. ராமலிங்கம் கூறியுள்ளார்.
லோக்சபா தேர்தலில் திமுக படுதோல்வி அடைந்ததைத் தொடர்ந்து 33 நிர்வாகிகள் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ராஜ்யசபா எம்.பி. கே.பி ராமலிங்கமும் ஒருவர்.
ஆனால், ராமலிங்கமோ மு.க.ஸ்டாலின் மீது தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். இந்த நிலையில் லண்டன் பி.பி.சி. தமிழோசைக்கு கே.பி. ராமலிங்கம் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:
நாமக்கல் தொகுதி என்னுடைய தொகுதி. பக்கத்திலே உள்ள தருமபுரி, சேலம், கரூர், ஈரோடு தொகுதிகளில் திமுகவெற்றி பெற்று நாமக்கல்லில் திமுக வெற்றி பெறவில்லை என்கிற போது என்னைப் போன்றவர்கள்தான் காரனம் என்று சொன்னாலும் கூட ஏற்றுக் கொள்ளலாம்.

பிரசார யுக்தி சரியில்லை
ஆனால் திமுகதான் மாநிலம் முழுவதும் தோற்றிருக்கிறது என்கிற போது தோல்விக்கான அடிப்படைக் காரணங்களைத்தான் ஆராய வேண்டும். லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்றால், யார் ஆட்சி அமைப்பார்கள், யாருக்கு ஆதரவளிப்போம்? யார் பிரதமர்? என்பது போன்ற கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாத நிலையில் பிரசார வியூகம் வகுக்கப்பட்டது.

ஸ்டாலினே பொறுப்பு
அதனால் கட்சியின் பிரசாரத்துக்கு முழு முதல் பொறுப்பாக இருந்தவர் என்கிற வகையில் கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின்தான் தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்க வேண்டும்.

தலைவராக துடிக்கிறார்
திமுகவின் தலைவர் என்று கூட்டணிக் கட்சிகள் தன்னை அங்கீகரிக்கவேண்டும் என்று ஸ்டாலின் விரும்பினார். அதாவது தன்னை தலைவர் என்று விஜயகாந்த் அழைக்க வேண்டும்; தன்னை தலைவர் என்று ராமதாஸ் அழைக்க வேண்டும்; விட்டால் தன்னை தலைவர் என்று சோனியா, சிதம்பர ம் ஆகியோரும் அழைக்க வேண்டும் என்று விரும்பியவர் மு.க.ஸ்டாலின்.

விஜய்காந்- ராமதாஸ் தயங்கியது..
இதனால்தான் விஜய்காந்த் , ராமதாஸ் போன்றவர்கள் திமுக கூட்டணியில் சேர தயக்கம் காட்டினார்கள். அத்துடன் வேட்பாளர் தேர்வு போன்றவற்றில் ஸ்டாலின் சரியான முடிவுகளை எடுக்கவில்லை என்பது ஏற்கனவே பத்திரிகைகளில் வெளியான செய்திகள்தான்.

சொத்தை கொள்ளையடிக்க நினைக்கிறார்
தான் என்ற அகம்பாவத்தோடு கூட்டணி கட்சிகளை நடத்தியது ஸ்டாலின். தான் தலைவராகி கட்சியின் சொத்துகளை கொள்ளையடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டவர் ஸ்டாலின்.

கருணாநிதி சூழ்நிலைக் கைதி
திமுகவில் தலைவர் கருணாநிதி சூழ்நிலையின் கைதியாக இருக்கிறார். இதனால் அவருக்கு முழுப்பொறுப்பு இல்லை. அதே நேரத்தில் ஸ்டாலினை அனுமதித்தது பற்றி அவரிடம்தான் கேள்வி கேட்க வேண்டும்.

ஸ்டாலின் தான் காரணம்
கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்கள் ஆதிக்கம் என்ற வகையில் முதலில் கட்சியில் தலைவரின் குடும்ப உறுப்பினர் என்ற சலுகையில் கட்சிக்குள் வந்த ஸ்டாலின் மீதுதான் வைக்கப்படவேண்டும்.

ஸ்டாலின் ஒதுங்க வேண்டும்
கட்சியில் இந்தப் பிரச்சினைகள் முடிந்து, சுமுகத்தீர்வு ஒன்று எட்டப்பட்டு கட்சி மீண்டும் பலப்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இது நடக்கவேண்டுமானால், ஸ்டாலின் கட்சி முன்னணிப் பொறுப்பிலிருந்தும் தீவிர அரசியலில் இருந்தும் ஒதுங்க வேண்டும். அப்போதுதான் திமுக தேர்தலில் வெல்லவும் முடியும்.
இவ்வாறு கே.பி. ராமலிங்கம் கூறினார்.












Click it and Unblock the Notifications