அதெப்படி எனக்கு நோட்டீஸ் அனுப்பலாம்? தி.மு.க. தலைமைக்கு எதிராக கே.பி. ராமலிங்கம் போர்க்கொடி!!
சென்னை: எம்.பி.க்கள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்காததால் தமக்கு தி.மு.க. தலைமை நோட்டீஸ் அனுப்பியதாக கூறப்படுவதை அக்கட்சியின் ராஜ்யசபா எம்.பி. கே.பி. ராமலிங்கம் மறுத்துள்ளார்.
மத்திய அரசின் செயல்பாடுகள், காவிரி பிரச்சினை, எம்.பி.க்கள் நிதியை செலவிடுவது உள்ளிட்ட விஷயங்கள் குறித்து தனது கட்சி எம்.பி.க்களுடன் விவாதிக்க கடந்த 4-ம் தேதி காலை 11 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் எம்.பி.க்கள் கூட்டத்துக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி ஏற்பாடு செய்திருந்தார்.
தி.மு.க.வைப் பொறுத்தவரையில் ராஜ்யசபாவில் கனிமொழி, திருச்சி சிவா, தங்கவேலு, கே.பி.ராமலிங்கம் ஆகியோர் மட்டுமே எம்.பி.க்கள். லோக்சபாவில் யாரும் இல்லை.
இந்நிலையில் கருணாநிதி கூட்டிய கூட்டத்தில் கனிமொழி மட்டுமே கலந்து கொண்டார். எஞ்சிய 3 எம்.பிக்களும் கலந்து கொள்ளாததால் கருணாநிதி கோபமடைந்திருக்கிறார்.
இதனால் 3 எம்.பி.க்களும் நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்யப்பட்டது. பின்னர் திருச்சி சிவா, தமக்கு ஏற்கெனவே ஒப்புக் கொண்ட கூட்டம் இருந்தது என விளக்கம் சொல்லியிருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து கடந்த ஞாயிறன்று கே.பி.ராமலிங்கம், தங்கவேலு ஆகிய 2 எம்.பி.க்களுக்கு மட்டும் தி.மு.க. அமைப்புச் செயலர் ஆர்.எஸ். பாரதி நோட்டீஸ் அனுப்பியிருந்தார். இதை நமது ஒன் இந்தியா தமிழ் இணையதளம் மட்டுமே வெளியிட்டிருந்தது.
இந்நிலையில் தற்போது எம்.பி. தங்கவேலு, தமக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்று விளக்கம் கொடுத்திருக்கிறார்.
ஆனால் கே.பி. ராமலிங்கமோ, அப்படி ஒரு கூட்டமே நடக்கலை.. நடக்காத கூட்டத்துக்கு நோட்டீஸா? என தி.மு.க. தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கியிருக்கிறார்.
மு.க. அழகிரியின் தீவிர ஆதரவாளரான கே.பி. ராமலிங்கம், தி.மு.க.வில் ஒழுங்கு நடவடிக்கைக்குள்ளானவர். தற்போதும் அவர் கட்சியில் தனித்தே செயல்பட்டு வருகிறார்.. தற்போது மீண்டும் கலகக் குரல் எழுப்பியிருக்கிறார்..