நலமாக இருக்கும் நடிகை பற்றி மீண்டும் மீண்டும் வதந்தி பரப்பும் மீடியா!
நலமாக உள்ள மூத்த நடிகை கே ஆர் விஜயா பற்றி மீண்டும் மீண்டும் மரண வதந்தி பரப்பிக் கொண்டிருக்கிறது மீடியாவின் ஒரு பகுதி.
சில மாதங்களுக்கு முன்பு அவர் இறந்துவிட்டதாகக் கூறினர். அப்போது அவர் கேரளாவில் நலமுடன் இருந்தார். நேற்று மீண்டும் அதே வதந்தியைப் பரப்பி கடுப்பேற்றியுள்ளனர்.
தமிழ் பட உலகில் 1960, 70 மற்றும் 80-களில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் கே.ஆர்.விஜயா. எம்ஜிஆர், சிவாஜியுடன் ஜோடியாக நடித்தவர். மலையாளம், தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்து இருக்கிறார். கே.ஆர்.விஜயாவுக்கு தற்போது 70 வயது ஆகிறது. இவரது கணவர் வேலாயுதன் நாயர் கடந்த வருடம் மரணம் அடைந்தார். அவர் மறைவுக்கு பிறகு கே.ஆர்.விஜயா கேரள மாநிலம் ஆலப்புழையில் உள்ள வீட்டில் வசித்து வந்தார்.
அவருடைய உடல் நிலை பற்றி நேற்று திடீர் வதந்தி பரவியது. இதனால் பட உலகில் பரபரப்பு ஏற்பட்டது. நடிகர்-நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினர் ஏராளமானோர் தொலைபேசியில் அவரது உடல் நிலை குறித்து விசாரித்த வண்ணம் இருந்தார்கள். பின்னர் அது வதந்தி என்று தெரிய வந்தது.
இதுபற்றி கே.ஆர்.விஜயாவிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, "என் காலில் சுளுக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் நடப்பதற்கு சிரமப்படுகிறேன். ஆலப்புழையில் உள்ள வீட்டில் தற்போது ஓய்வு எடுத்து வருகிறேன்.
நடிகை ராதிகா மகள் திருமணத்துக்கு சென்னை வரலாம் என்று இருந்தேன். காலில் வலி இருந்ததால் வர இயலவில்லை. எனது உடல் நிலை பற்றி வதந்தி பரவி இருக்கிறது. ஏற்கனவே பல முறை இதுபோல் வதந்தி பரப்பினார்கள்.
நான் நலமாக இருக்கிறேன். என் உடல் நிலை பற்றிய வதந்தியை யாரும் நம்ப வேண்டாம். இதுபோன்ற வதந்திகள் பரவுவதுபற்றி நான் வருத்தப்படவில்லை. இதன்மூலம் எனது ஆயுள் இன்னும் அதிகரிக்கும் என்றே கருதுகிறேன். எனது உடல் நிலையில் அக்கறை கொண்ட அனைவருக்கும் நன்றி. விரைவில் சென்னை வந்து உங்கள் அனைவரையும் சந்திப்பேன்," என்றார்.