கூடங்குளம் அணு உலை அருகே 6000 வெடிகுண்டுகள்: போலீசுக்கு பயந்து கடலில் வீச்சு!

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணு உலைக்கு எதிர்ப்பு தெரிவித்து இடிந்தகரையில் கடந்த 2 ஆண்டுக்கும் மேலாக மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு கூத்தங்குழி கிராம மக்களும் ஆதரவு தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், கூத்தங்குழியில் தாது மணல் ஆதரவாளர்கள், எதிர்ப்பாளர்கள் என இரு கோஷ்டிகள் உருவாகின. எதிர்தரப்பினரை அச்சுறுத்தும் வகையில் நாட்டு வெடிகுண்டுகளை தயாரித்து வீசினர்.
இதையடுத்து அங்கிருந்து விரட்டப்பட்ட ஒரு கோஷ்டியினர் இடிந்தகரை சுனாமி காலனியில் குடியேறி பெருமளவில் நாட்டு வெடிகுண்டுகள் தயாரித்தனர்.
இந்த நிலையில் செவ்வாய்கிழமை இரவு வெடிகுண்டுகள் வெடித்து வியாகப்பன் உள்ளிட்ட 6 பேர் இறந்தனர். போலீசார் சோதனை நடத்தி ஏராளமான வெடிகுண்டுகள், அவற்றை தயாரிக்கப்படும் பாஸ்பரஸ், கந்தகம், அலுமினிய பவுடர், சிவப்பு பாஸ்பரஸ் ஆகியவற்றை கைப்பற்றினர். மேலும் இடிந்தகரையிலும் போலீசார் சோதனை நடத்தக்கூடும் என்ற தகவல் பரவியது. இதையடுத்து அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடிகுண்டுகளை அங்குள்ளவர்கள் எடுத்துச் சென்று கடலில் வீசினர்.
கூடங்குளம் அணு உலை அருகே 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெடிகுண்டுகள் கடலில் வீசப்பட்டது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
நாட்டு வெடிகுண்டுகள் தயாரிக்க பயன்படும் வெடிமருந்து அனைத்தும் சிவகாசியில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் சிவகாசியைச் சேர்ந்த வெடிமருந்து கம்பெனியின் பெயர் பொறித்த சாக்குமூட்டைகளை போலீசார் சுனாமி காலனியில் இருந்து கைப்பற்றினர்.
இதுதொடர்பாக வெடிகுண்டு மற்றும் தடயவியல் நிபுணர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அவர்கள் சிவகாசிக்கு சென்று வெடிமருந்துகள் வாங்கியது யார் என்பது குறித்தும் விசாரணை நடத்த உள்ளனர். இதில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications