கூடங்குளம் அணு உலையில் மின் உற்பத்தி தொடங்கியது
கூடங்குளம்: கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதல் யூனிட்டில் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது. இன்று அதிகாலை 2.45 மணிக்கு மின் உற்பத்தி தொடங்கி உள்ளது.
நெல்லை மாவட்டம், கூடங்குளத்தில் இந்தியா , ரஷ்யா கூட்டு முயற்சியுடன் ரூ.13,500 கோடி மதிப்பீட் டில் 1000 மெகாவாட் உற்பத்தி திறனுள்ள இரண்டு அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன. முதல் அணு உலையின் மூலம் கடந்த 2011ம் ஆண்டு டிசம்பர் மாதம் மின் உற்பத்தியை தொடங்க திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால் அணு உலைக்கு எதிராக இடிந்தகரை உள்ளிட்ட கடலோர கிராம மக்கள் போராட்டத்தில் குதித்தனர். இதனால் 2011ம் ஆண்டு அணு மின் நிலைய பணிகள் 6 மாதங்கள் தாமதமானது. பாதுகாப்பு தொடர்பாக மத்திய, மாநில நிபுணர் குழுக்கள் அமைக்கப்பட்டு கூடங்குளத்தில் ஆய்வு நடத்தப்பட்டது. இதன் பின்னர் கடந்த ஆண்டு மார்ச் 19ம் தேதி மீண்டும் கூடங்குளத்தில் பணிகள் தொடங்கின.

கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு தடை கோரி ஐகோர்ட், சுப்ரீம் கோர்ட்டில் வழக்குகள் இருந்ததால் மின் உற்பத்தி தாமதமாகி வந்தது. கடந்த மே 6ம் தேதி கூடங்குளத்தில் மின் உற்பத்தியை துவங்க தடையில்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. எனினும் பாதுகாப்பு அம்சங்களை நிறைவேற்றுமாறு அறிவுறுத்தி யது.
இதைத் தொடர்ந்து கூடங்குளத்தில் மீண்டும் ஆய்வு மேற்கொண்ட அணுசக்தி ஒழுங்கு முறை வாரியம், கூடங்குளத்தின் முதல் அணு உலையை அணு பிளவுக்கு உட்படுத்தவும், மின் உற்பத்தியை தொடங்கவும் ஜூலை மாதம் அனுமதி வழங்கியது.
இந்த நிலையில் கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதல் யூனிட்டில் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது. இன்று அதிகாலை 2.45 மணிக்கு மின் உற்பத்தி தொடங்கி உள்ளது.
முதல்கட்டமாக 75 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதாக கூடங்குளம் அணுமின் நிலைய வளாக இயக்குநர் சுந்தர் தெரிவித்துள்ளார். மேலும், காலை 5 மணியளவில் மின் உற்பத்தி 180 மெகாவாட்டாக உயர்ந்துள்ளது. இந்த மின் உற்பத்தியானது படிப்படியாக உயர்த்தப்பட்டு 300 முதல் 400 மெகாவாட்டை எட்டியதும் மத்திய தொகுப்பில் இணைக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
இதனிடையே அணுஉலைக்கு எதிராக போராடிவரும் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமார், அடுத்த கட்ட போராட்டம் குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாக கூறியுள்ளார். அணு உலைக்கு எதிரான எங்களின் போராட்டம் தொடரும். தொடர்ந்து அறவழியில் போராடுவோம்'' என்றும் அவர் கூறியுள்ளார்












Click it and Unblock the Notifications