நெல்லித்தோப்பில் நாராயணசாமிக்கு "குண்டு" வைக்க காத்திருக்கும் 'கூடங்குளம்'?
புதுவை: நெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் புதுவை முதல்வர் நாராயணசாமி அவ்வளவு எளிதாக கரைசேர்ந்துவிட முடியாத அளவுக்கு வரிந்துகட்ட போகின்றன கிறிஸ்துவ அமைப்புகளும் என்.ஜி.ஓக்களும்... இதனால் நெல்லித்தோப்பு தொகுதி தேர்தல் களம் பரபரப்பாகவே இருக்கும் என கூறப்படுகிறது.
புதுவை முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட நாராயணசாமி 6 மாதங்களுக்குள் எம்.எல்.ஏ.வாக வேண்டும். இதற்காகத்தான் நெல்லித்தோப்பு எம்.எல்.ஏ. ஜான்குமார் ராஜினாமா செய்தார்.
ஆனால் ராஜினாமா செய்த மறுநாளே ஜான்குமார் வீட்டில் ரூ1.20 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த பணம் ஜான்குமாருக்கு நாராயணசாமி கொடுத்ததாக கூறப்பட்டது.

ஜான்குமார் மனைவி எதிர்ப்பு
இதனிடையே எம்.எல்.ஏ. பதவியை ஜான்குமார் ராஜினாமா செய்யக் கூடாது என தொடக்கம் முதலே அவரது மனைவி எதிர்த்து வருகிறார். அதுவும் நாராயணசாமிக்காக விட்டுத்தரவே கூடாது என்பது அவரின் பிடிவாதம்.

கூடங்குளம் நிதி உதவி
கிறிஸ்தவர்கள் கணிசமாக இருக்கும் தொகுதி நெல்லித்தோப்பு. நாராயணசாமி மத்திய அமைச்சராக இருந்த போது கூடங்குளம் போராட்டத்துக்கு நிதி உதவி செய்வதாகக் கூறி பல என்ஜிஓக்களுக்கான வெளிநாட்டு நிதி உதவியை ரத்து செய்ய வைத்ததில் முக்கிய பங்கு நாராயணசாமிக்கு உண்டு என்பது கிறிஸ்தவ மற்றும் என்ஜிஓக்களின் குற்றச்சாட்டு.

பாடம் புகட்ட ரெடி
இதற்கு பாடம் புகட்டும் வகையில் நாராயணசாமிக்கு எதிராக நெல்லித்தோப்பு தொகுதியில் கிறிஸ்தவர்களை ஒருங்கிணைப்போம் கடந்த ஆகஸ்ட் மாதமே என்ஜிஓக்கள் கூறியிருந்தன. தற்போது நெல்லித்தோப்புக்கு நவம்பர் 19-ந் தேதி இடைத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நெருக்கடியில் நாராயணசாமி
இனி என்ஜிஓக்கள் ஓரணியில் திரண்டு நாராயணசாமிக்கு எதிராக வேலை செய்யக் கூடும். இது நிச்சயம் நாராயணசாமிக்கு கடும் நெருக்கடியைத்தான் ஏற்படுத்தும் என்கின்றன புதுவை அரசியல் வட்டாரங்கள்.












Click it and Unblock the Notifications