கூடங்குளம் அணுமின் நிலையம் 1000 மெகாவாட் மின் உற்பத்தி செய்து சாதனை
திருநெல்வேலி: கூடங்குளம் அணுமின் நிலையம் 1000 மெகாவாட் மின் உற்பத்தி செய்து சாதனை அளவை எட்டியுள்ளது.
கூடங்குளம் அணுமின் நிலையம் முதல் யூனிட்டில் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இன்று 1000 மெகாவாட் மின் உற்பத்தி செய்து சாதனை புரிந்துள்ளது.

இது குறித்து கூடங்குளம் அணுமின் நிலைய வளாக இயக்குநர் ஆர்.எஸ்.சுந்தர் கூறியதாவது:
கூடங்குளம் அணுஉலையில் மூன்று இலக்கங்களில் இருந்த மின் உற்பதித் திறன் 4 இலக்கத்தை எட்டிய நிகழ்வு மிகவும் உணர்வுப்பூர்வமானது. இத்தனை ஆண்டுகளாக எங்களுக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கு நாங்கள் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்
கடந்த 5-ம் தேதி கூடங்குளம் அணுஉலையில் உற்பத்தித் திறன் 90% எட்டிய போது, ஒரு வார காலத்திற்குள் முழு உற்பத்தித் திறனை எட்டும் என எதிர்பார்த்தோம். அணுஉலை உற்பத்தித் திறன் 900 மெகாவாட் எட்டிய போது அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத்திடம் மின் உற்பத்தி குறித்த அறிக்கையை அளித்து அடுத்த கட்டத்திற்கான அனுமதியை பெற சற்று கால அவகாசம் தேவைப்பட்டது.
இவ்வாறு சுந்தர் கூறினார்.
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் முதலாவது அணு உலையில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 22-ம் தேதி அதிகாலை 2.45 மணிக்கு 160 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு மத்திய மின்தொகுப்பில் இணைக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து முதல்கட்டமாக 500 மெகாவாட் மின் உற்பத்தி செய்வதற்கு இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் ஆகஸ்ட் 14-ம் தேதி அனுமதி அளித்திருந்தது. அதை தொடர்ந்து அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தி தொடர்ந்து நடைபெற்று வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications