ஆங்கில வழிக் கல்வியால் அறிவு வளர்ச்சி பாதிக்கும்... குமரி அனந்தன் உண்ணாவிரதம்
திருச்சி: ஆங்கில வழிக் கல்வியை தொடக்கக் கல்வியில் வழங்குவதை நிறுத்தக் கோரி முன்னாள் காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன் தலைமையில் திருச்சியில் மாவட்ட தமிழ் இயக்கங்கள் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகே நடந்த உண்ணாவிரதத்திற்கு குமரி அனந்தன் தலைமை தாங்கினார். உண்ணாவிரதத்தை அருட்தந்தை அமுதன் அடிகள் துவக்கி வைத்தார்.

தமிழை பயிற்றுமொழியாகக் கொண்டு பயின்றவர்களுக்கு மட்டுமே அரசு வேலை வாய்ப்புகளை முழுமையாக வழங்க வேண்டும். தொடக்கக் கல் வியில் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாக்குவதை நீக்க வேண்டும். ஆங்கிலவழிக் கல்வியால் குழந்தைகளின் கற்கும் திறனும், அறிவு வளர்ச்சியும் பாதிக்கும்.
எனவே, தமிழ்மக்கள் ஆங்கில வழிக்கல்வி மோகத்தைக் கைவிட்டு தமிழ்வழிக்கல்வியை பின்பற்ற வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள மெட்ரிகுலேசன் பள்ளிகள் தமிழை மொழிப்பாடமாக ஏற்க மறுப்பதற்கு கண்டனம். மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணைக் குழுவின் தேர்வுகளில் இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக் கொண்டுள்ள தமிழ்மொழியில் தேர்வு மற்றும் வினாத்தாள்கள் அமைய வேண்டும்.
மத்திய அரசு சமஸ்கிருத மொழிக்கு அளிக்கப்படும் நிதியுதவியைப் போல் உயர்தனிச் செம்மொழியாம் தமிழுக்கும் நிதியுதவி வழங்க வேண்டும்.
தமிழ்நாட்டில் அரசுப்பள்ளிகள் தொடர்ந்து மூடப்பட்டு வருகின்றன. போதிய கழிப்பறைகளும், அடிப்படை வசதிகளும் இல்லாமையே இதற்குக் காரணம். இந்த நிலை தொடரா வண்ணம் உடனடியாகத் தமிழக அரசு, அரசுப் பள்ளிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை முழுமையாகச் செய்து தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
மதிமுக அரசியல் ஆலோசனை குழு உறுப்பினர் புலவர் முருகேசன் உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார்.












Click it and Unblock the Notifications