ரதத்தின் மீது ஆனந்த சயனத்தில் வீற்றிருக்கும் கும்பகோணம் சாரங்கபாணிநாதர்
கும்பகோணம்: தென்னகத்தின் கும்பமேளா என போற்றப்படும் மகாமகம் விழா கும்பகோணத்தில் களைகட்டியுள்ளது. ரயில் வசதி உள்ளதால் இந்த ஆண்டு ஓரு கோடி பக்தர்கள் வரை நீராடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மகாமகம் நடைபெறும் இந்த தருணத்தில் கும்பகோணத்தில் உள்ள பிரபல ஆலயங்களை அறிந்து கொள்வோம்.
கும்பகோணத்தில் உள்ள வைணவ தலங்களில் ஸ்ரீ சாரங்கபாணிநாதர் ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றது. இதன் ஆன்மீக முக்கியத்துவத்தினை கருத்தில் கொண்டு பிரம்மாண்டமாகக் கட்டப்பட்டுள்ளது. 147 அடி உயரமுள்ள மிகப் பிரம்மாண்டமான இராஜ கோபுரத்துடன் இக்கோவில் கம்பீரமாகக் காட்சியளிக்கிறது.
108 திவ்ய தேசங்களில் ஸ்ரீரங்கம், திருப்பதிக்கு அடுத்ததாக போற்றப்படும் இக்கோயில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது. ஏழு ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட கோயிலாகவும் இது திகழ்கிறது.
12 ஆழ்வார்கள் தமது பாடல்களில் இக்கோவிலைப் பற்றியும் இக்கோவிலில் உள்ள பெருமாளைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளனர். இக்கோவில் மிகப்பழமையானதோடு மட்டுமல்லாமல், தென்னிந்தியாவிலேயே உள்ள மகாவிஷ்ணுவின் ஒரே ஆலயம் இதுவாகும்.
ரதத்தின் மீது ஆனந்த சயனம்
இக்கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள மகாவிஷ்ணுவின் சிலையானது ஆதிசேஷன் தலைமீது படம் எடுத்துக் கொண்டு நிற்க, பெருமாள் ஒரு ரதத்தின் மீது அனந்தசயன நிலையில் பக்தர்களுக்குக் காட்சியளிக்கிறார்.
கோமளவள்ளி தாயார்
இங்குள்ள தாயாரின் பெயர் கோமளவல்லித் தாயார். ஹேமரிஷியின் பெண்ணாக அவதரித்த கோமளவல்லித் தாயாரை திருக்கல்யாணம் செய்துகொள்ள வைகுண்டத்தில் இருந்து ரதத்தில் எழுந்தருளினார் கும்பகோணம் சாரங்கபாணி பெருமாள் என்கிறது புராண கதை.
மூன்று ரதங்கள்
'சிலா ரதம்' என்ற கல் ரதத்தில்தான் பெருமாள் இந்தக் கோயிலில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இது தவிர உற்சவ காலங்களில் எழுந்தருள்வது சித்திரைத் திருத்தேர் அல்லது பெரிய தேர் எனும் மரத்தினாலான 'தாரு ரதம்'; திருமங்கை ஆழ்வார் எழுதிய சாரங்கபாணி பெருமாளுக்கு மட்டுமே உரித்தான பாசுரங்களைக் கொண்ட 'திரு எழு கூற்றிருக்கை' எனும் 'ஞான ரதம்' ஆகிய மூன்று விதமான தேரில் அமர்ந்து பெருமாள் அருள்பாலிக்கிறார்.
சூரிய க்ஷேத்ரம்
இந்த மூன்று ரதங்களையும் வணங்குபவர்களுக்கு அவரவரின் எண்ணங்களையும் பிரார்த்தனைகளையும் பெருமாள் பூர்த்தி செய்து அருள்பாலிக்கிறார் என்பது நம்பிக்கை! சூரியனின் கர்வத்தை மகாவிஷ்ணு தனது சக்ராயுதத்தைக் கொண்டு அடக்குகிறார். ஆகையால் இந்த க்ஷேத்ரத்திற்கு சூரிய க்ஷேத்ரம் என்றும் பெயர் உண்டு.
இரண்டு வாயில்கள்
இதன் காரணமாக இங்கு பெருமாள் சந்நிதிக்கு நேர்வாசல் கிடையாது. உத்தராயன காலத்துக்கு ஒரு வாசலும், தக்ஷிணாயன காலத்துக்கு ஒரு வாசலும் என இரண்டு வாசல்கள் உள்ளன!
காண கண்கோடி வேண்டும்
'அபரியாப்தம்' எனும் வடமொழி சொல்லுக்கு 'திகட்டாத இன்பம்' அளிப்பது என்று பொருள். ஆகவே ஸ்ரீசாரங்கபாணியை எத்தனை முறை தரிசித்தாலும் தெவிட்டாத இன்பமும் அருளும் கிட்டும் என்பது உறுதி. கும்பகோணம் இரயில்வே நிலையத்திலிருந்து 2 கிலோமீட்டர் தூரத்திற்கும் குறைவான தூரத்தில் இக்கோவில் அமைந்துள்ளது .