காமராஜர் பிறந்த மண்ணில் களமிறங்கும் குஷ்பு: வாசனுக்கு செக் வைத்த ஈ.வி.கே.எஸ்
சென்னை: காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த நடிகை குஷ்பூ முதன் முறையாக மறைந்த காங்கிரஸ் கட்சி தலைவரும் முன்னாள் தமிழக முதல்வரும் காமராஜர் பிறந்த ஊரான விருதுநகரில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.
திமுகவில் இருந்து சிலமாதங்களுக்கு முன்பு விலகிய குஷ்பு கடந்த நவம்பர் 26ஆம் தேதி டெல்லியில் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அதற்கு பிறகு சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களிடம் பேசிய குஷ்பு, காங்கிரஸ் கட்சியை மீட்டெடுக்க கிராமம், கிராமமாக போகப் போவதாக கூறி காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களுக்கு ஆனந்த அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.
மகாகவியின் பிறந்தநாள்
விருதுநகரில் நாளை காங்கிரஸ் கட்சி சார்பில் மகாகவி பாரதியார் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், விருதுநகர் முன்னாள் எம்.பி. மாணிக்கம் தாகூர் மற்றும் நடிகை குஷ்பூ ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.
காமராஜரும் ஜி.கே.வாசனும்
தமிழக காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் அடையாள அட்டையில் காமராஜர், மூப்பனார் பெயர்கள் இடம் பெறவில்லை என்ற குற்றச்சாட்டை தெரிவித்து தான் வாசன் புதுக் கட்சியை துவக்கினார். அவரது கட்சி கொடியிலும் காமராஜர் படம் இடம் பெற்றுள்ளது.
இளங்கோவனின் பிரயத்தனம்
ஜி.கே.வாசன் வெளியே சென்றதால் கட்சிக்கு பாதிப்பு வந்துவிடக் கூடாது என அக்கட்சியின் புதிய தலைவர் இளங்கோவன் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். தினந்தோறும் சத்தியமூர்த்தி பவனில் கூட்டம் இருக்கும் அளவிற்கு பல நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து வருகிறார்.
விருதுநகரில் பொதுக்கூட்டம்
காமராஜர் என்றாலே காங்கிரஸ்தான் நினைவுக்கு வரவேண்டும். எனவே அவர் பெயரை அரசியலுக்காக வாசன் பயன்படுத்துவதை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் தான் விருதுநகரில் நாளை பொதுக் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாம்.
வாசனா? குஷ்புவா?
காமராஜரை வைத்து வாசன் அரசியல் செய்வதற்கு 'செக்' வைக்கும் வகையிலேயே குஷ்புவின் முதல் பொதுக் கூட்டத்தை காமராஜர் பிறந்த மண்ணான விருதுநகரில் நடத்துகிறார் இளங்கோவன். இதன்பின் ஒவ்வொரு மாவட்டமாக குஷ்பு பங்கேற்கும் கூட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளார் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் என்கின்றனர் காங்கிரஸ் கட்சியினர்.
கூட்டம் கூடும் ஆனா?
குஷ்புவை வைத்து ஊர் ஊராக பொதுக்கூட்டம் போட்டு கூட்டத்தை கூட்டலாம் ஆனால் அவை எல்லாம் வாக்குகளாக மாறுமா? என்பதை வாக்காளர்கள்தானே முடிவு செய்யவேண்டும் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.