குஷ்பு கஷ்டப்பட்டு கண்டுபிடிச்ச 'சூரம்பட்டி மொசுவண்ண கவுண்டர் சந்து' வீடு... தேர்தல் படுத்தும் பாடோ!
ஈரோடு: ஈரோட்டில் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்த காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் நடிகை குஷ்பு நேற்று முதல் ஒரு வீட்டை கண்டுபிடிக்க பெரும்பாடுபட்டார்... ஒருவழியாக இன்று அந்த வீட்டின் முன் நின்று போட்டோ எடுத்து ஃபேஸ்புக்கில் போட்டு மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார்.
ஈரோட்டில் தமாகாவில் இருந்து பலர் விலகி காங்கிரஸில் மீண்டும் இணையும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில்தான், நான் நடிகை என்றால் ஜெயலலிதா என்ன அன்னை தெரசா அல்லது அன்னிபெசன்ட் அம்மையார் குடும்பமா? என எகத்தாள கேள்வி கேட்டிருந்தார்.

அதே கூட்டத்தில் ஒரு துண்டு சீட்டில் ஒரு முகவரியை எழுதி வைத்துக் கொண்டு அதைப் பற்றி பலரிடமும் விசாரித்துக் கொண்டிருந்தார். ஈரோடு, சூரம்பட்டி, மொசுவண்ண கவுண்டர் சந்தில் உள்ள வீட்டின் முகவரி அது...
குஷ்பு தேடிய வீடு அவரது கணவர் சுந்தர் சி. பிறந்த வீடு. ஈரோடு சூரம்பட்டியில் பிறந்த அவர் கோவையில் வளர்ந்தவர்; அதனால் அவரை கோயம்புத்தூர்காரர் என்றே பலரும் கூறுகிறார்கள் எனவும் குஷ்புவே விளக்கம் தந்திருக்கிறார்.
இந்நிலையில் இன்று தம்முடைய ஃபேஸ்புக்கில் குஷ்பு, சூரம்பட்டி மொசுவண்ண கவுண்டர் சந்தில் உள்ள சுந்தர் சி. பிறந்த வீட்டின் முன் நின்று புகைப்படம் எடுத்து மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார் குஷ்பு.
ஒருவேளை சட்டசபை தேர்தலில் ஈரோடு தொகுதியில் போட்டியிட குஷ்பு திட்டமிட்டுள்ளாரோ என்னவோ? ஏனெனில் அப்ப "ஈரோட்டு மருமகள்"னு பேசி ஓட்டு சேகரிக்கலாம் அல்லவா?












Click it and Unblock the Notifications