குத்தாட்ட நடிகைகளை தரக்குறைவாக விமர்சிப்பதா? குஷ்பு கண்டனம்
சென்னை: பெண்களை மதிக்கத் தெரியாதவர்கள்தான் அவர்களைப் பற்றி தரக்குறைவாக பேசுவார்கள் என்று நடிகை குஷ்பு கூறியுள்ளார்.
சினிமாக்களில் அரைகுறை ஆடை அணிந்து குத்தாட்டம் போடும் நடிகைகளை விபச்சாரிகள் என அறிவிக்கவேண்டும் என்று கூறிய இந்து மகாசபையின் பொதுச்செயலாளர் நவீன் தியாகியின் கருத்துக்கு குஷ்பு பதிலடி கொடுத்துள்ளார்.
உத்தரபிரதேசத்தில் நேற்று நடைபெற்ற ஒரு கூட்டத்தில் பேசிய நவீன் தியாகி, 'சினிமாவில் பணத்திற்காக அரைகுறை ஆடை அணிந்து குத்தாட்டம் போடும் நடிகைகள், விபச்சாரம் செய்யும் பெண்களுக்கு சமமானவர்களாக அறிவிக்க வேண்டும் என்றும் இந்த விவகாரத்தை உச்சநீதிமன்றத்திற்கு எடுத்து செல்லவிருப்பதாகவும் கூறியுள்ளார்.
அவருடைய இந்த சர்ச்சைக்குரிய கருத்துக்கு நடிகைகள் உள்பட பெண்கள் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. தியாகியின் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள தேசிய மகளிர் ஆணையத் தலைவர் லலிதா குமாரமங்கலம், "தியாகி அவரது பிற்போக்குத்தன மனப்போக்கை வெளிப்படுத்தியுள்ளார். ஆபாசமாக நடனமாடும் பெண்கள் குறித்து கருத்து தெரிவிப்பவர்களிடம் திருப்பி ஆயிரம் கேள்விகளை எழுப்பலாம்.
ஆபாசமாக நடனமாடும் பெண்களை கண்டு ரசிக்கும் ஆண்களை எந்தப் பெயரில் அழைப்பது என்பதை யாராவது விளக்க வேண்டும். இந்த விவகாரத்தை அவர் உச்ச நீதிமன்றத்துக்கு எடுத்து சென்றால், அவர்களை அங்கு எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். ஆனால் எனக்கும் நம்பிக்கை உள்ளது. இதுபோன்ற பொருத்தமற்ற கருத்துக்களை உச்ச நீதிமன்றம் நசுக்கி தூக்கி எறிந்து விடும் என்று கூறியுள்ளார்.
நவீன் தியாகியின் இந்த சர்ச்சைக்குரிய கருத்து பற்று குஷ்பு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கருத்து கூறியுள்ளார். பெண்கள் மீது மரியாதை செலுத்த தெரியாதவர்களே இதுபோன்ற கருத்துக்களை கூறுவார்கள் என்று கூறியுள்ளார்.