குவைத் தீவிபத்து: என் கணவர் எங்கே? அது அவரல்ல! மனைவி கண்ணீர்! பெரும் சோகம்
செஞ்சி: குவைத் தீவிபத்தில் செஞ்சி இளைஞரின் நிலை தெரியாமல் அவரது குடும்பத்தினர் தவித்து வருகிறார்கள்.
குவைத்தின் மங்காப் நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏராளமான தொழிலாளர்கள் தங்கி பணியாற்றி வருகிறார்கள். இந்த அடுக்குமாடி குடியிருப்பு கேரளாவை சேர்ந்த என்பிடிசி குழுமத்திற்கு சொந்தமானது. இதன் உரிமையாளர் கே.ஜி. ஆபிரகாம்.

இந்தியாவில் இருந்து குவைத் மங்காப் நகருக்கு வேலை தேடி செல்லும் தொழிலாளர்கள் அங்கு தங்கி பணியாற்றி வருகிறார்கள். இந்த நிலையில் நேற்றைய தினம் திடீரென தொழிலாளர்கள் தங்கியிருந்த குடியிருப்பில் திடீரென பயங்கர தீவிபத்து ஏற்பட்டது.
இதில் தரைதளத்தில் சமையலறையில் பிடித்த தீ மளமளவென பரவியது. இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வருகை தந்து தீயை அணைத்தனர். ஆனாலும் தீ கட்டுக்குள் வரவில்லை. இந்த விபத்தில் 50-க்கும் மேற்பட்டோர் இறந்ததாகவும் பல தொழிலாளர்கள் படுகாயம் அடைந்ததாக தெரிகிறது.
இந்த விபத்தில் சிக்கி இந்தியர்கள் 43 பேர் வரை பலியாகி இருக்கலாம் என சொல்லப்படுகிறது. குவைத் தீவிபத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இன்று காலை குவைத்துக்கு மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் கே.வி. சிங் சென்றுள்ளார்.
பலியானவர்களின் உடல்களை அடையாளம் காண முடியாத நிலை உள்ளது. இதனால் டிஎன்ஏ சோதனை மேற்கொண்டால் மட்டுமே உடல்கள் எல்லாம் யாருடையது என தெரியவரும். இந்த தீவிபத்தில் கேரளா, தமிழகத்தை சேர்ந்தவர்கள் இறந்திருக்கலாம் என தெரிகிறது. தமிழகத்தை பொருத்தமட்டில் மொத்தம் 3 பேர் பலியாகிவிட்டனர்.
அயலகத் தமிழர் நலத்துறையின் கீழ்க்காணும் எண்களைத் தொடர்பு கொள்ளவும்: இந்தியாவிற்குள்: +91 1800 309 3793 வெளிநாடு: +91 80 6900 9900, +91 80 6900 9901 ஆகிய எண்களை முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
செஞ்சியை சேர்ந்த முகமது ஷெரிப். இவர் கடந்த 14 ஆண்டுகளாக சில்வர் கம்பெனியில் பணியாற்றி வந்த நிலையில் தீ விபத்து ஏற்பட்ட கட்டடத்தில் தங்கி இருந்துள்ளார். முகமது ஷெரிப் , சிகிச்சை பெறும் புகைப்படம் சமூகவலைதளங்களில் வெளியான நிலையில் அவரது புகைப்படம் அல்ல என குடும்பத்தினர் மறுத்துள்ளனர்.
முகமது ஷெரிப்பை நேற்று முதல், மனைவி, உறவினர்கள் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொள்ள முயற்சித்து வருகிறார்கள். தொலைபேசியை ஷெரிப் எடுக்காததால் அவரது நிலை குறித்து தெரியாமல் குடும்பத்தினர் தவித்து வருகிறார்கள். முகமது ஷெரிப் குறித்த தகவலை மத்திய மாநில அரசுகள் கேட்டு தெரிவிக்க வேண்டும் என குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications