2 கோடி தங்கத்தை மலேசியாவிலிருந்து கடத்தி வந்த பெண் - சென்னை விமான நிலையத்தில் கைது
சென்னை: சென்னை விமான நிலையத்தில் மலேசியாவில் இருந்து தங்கம் கடத்தி வந்த பெண்ணிடம் இருந்து தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
மலேசியாவில் இருந்து இன்று காலை சென்னைக்கு வந்த விமானத்தில் பயணிகளின் உடமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த சிந்துஜா என்ற பெண் சுற்றுலா விசாவில் மலேசியா சென்று வந்தது தெரிய வந்தது. அவரது மீது சந்தேகம் அடைந்த சுங்கத்துறை அதிகாரிகள் அவரின் கைப்பை, சூட்கேசை சோதனை செய்தனர்.
அப்போது சூட்கேசின் ரகசிய அறையில் தங்க கட்டிகள் இருந்தது தெரிய வந்தது. மொத்தம் 65 தங்க கட்டிகள் இருந்தன. இதன் மொத்த எடை 6.5 கிலோ, மதிப்பு கிட்டதட்ட ரூபாய் 2 கோடி என்பதும் தெரிய வந்தது.
இதனையடுத்து சுங்கதுறை அதிகாரிகள் சிந்துஜாவை கைது செய்தனர். விசாரணையில் அவர் சர்வதேச கடத்தல் கும்பலுடன் தொடர்பு உள்ளவர் என்பது தெரிய வந்தது. இதுகுறித்து தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.