3 வயது குழந்தைக்கு சூடு போட்ட ஹவுஸ் ஓனர் பெண் கைது
கோவை: கோவையில் 3 வயது குழந்தைக்கு வீட்டு உரிமையாளர் பெண் ஒருவர் சூடு வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை புலியகுளம் ஏரிமேடு பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார். இவரது மகன் பென்னு. இவருக்கு அம்மா இல்லை. அப்பா குடி பழக்கத்திற்கு அடிமையானவர்.
இவர் பென்னுவை சரிவர பராமரிக்காததால் சிறுவன் அவரது பாட்டியின் பராமரிப்பில் இருந்து வருகிறார். இந்நிலையில், பென்னுவின் பாட்டி குடியிருக்கும் வீட்டின் உரிமையாளரது வீட்டுக்கு நேற்று பென்னு விளையாட சென்றுள்ளான். அங்கிருந்த வீட்டு உரிமையாளர் பெண் விளையாட வந்த பென்னுவை மிரட்டி, அவனது கன்னத்தில் 2 இடங்களில் சூடு போட்டுள்ளார்.
வலி தாங்காமல் அழுதபடியே சென்ற பென்னு, நடந்ததை தனது பாட்டியிடம் கூறியுள்ளான். இதைகேட்டு அதிர்ச்சி அடைந்த பென்னுவின் பாட்டி மற்றும் அப்பகுதியை சேர்ந்த மக்கள் குழந்தைகள் நல அதிகாரி ஏஞ்சலினிடம் புகார் கூறினர்.
இதையடுத்து அதிகாரி ஏஞ்சலின் மற்றும் அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். பென்னுவை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். சூடு வைத்த வீட்டு உரிமையாளர் பெண் கைது செய்யப்பட்டதுடன், அவர் மீது நீதிமன்றம் மூலமாக நடவடிக்கை எடுக்கப்படும் என குழந்தை நல அதிகாரிகள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications