புற்றுநோயில் இறந்த கணவர்... மிரட்டும் டாக்டர் மாமனார்- காவல் நிலையத்தில் தர்ணாவில் குதித்த இளம்பெண்
செங்கல்பட்டு: காஞ்சிபுரத்தில் மருத்துவரான மாமனார் மீது மருமகள் புகார் அளித்ததுடன் தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு பெரியமணியக்கார தெருவைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவர், அந்த பகுதியில் குழந்தைகள் நல மருத்துவராக உள்ளார். இவருடைய மகன் விவேக். இவருக்கும், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த உறவுக்கார பெண் ஸ்ரீவித்யா என்பவருக்கும் கடந்த 2012 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது பெண் வீட்டார் சார்பில் 50 பவுன் தங்க நகைகள், 5 கிலோ வெள்ளி பொருட்கள், ரூபாய் 15 லட்சம் ரொக்கம் மற்றும் விசாகப்பட்டினத்தில் ஒரு வீடு ஆகியவற்றை சீர்வரிசையாக கொடுத்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் புற்று நோயால் பாதிக்கப்பட்ட விவேக், கடந்த வருடம் மரணம் அடைந்தார். இதனால் ஸ்ரீவித்யா தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். இதையடுத்து அவர், தனது பெற்றோர் கொடுத்த சீர்வரிசை பொருட்களை திரும்ப தரும்படி தனது மாமனாரிடம் கேட்டார். அதற்கு டாக்டர் விஜயகுமார் சரியான பதில் சொல்லாமல் மருமகள் ஸ்ரீவித்யாவை மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் தனது மாமனார் மீது நடவடிக்கை எடுக்கும்படி செங்கல்பட்டு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதியன்று ஸ்ரீவித்யா புகார் செய்தார்.
அந்த புகார் மனுவை பெற்றுக்கொண்ட போலீசார், புகார் மனு ஏற்பு சான்றிதழை ஸ்ரீவித்யாவிடம் கொடுத்து அனுப்பினர். ஆனால் அதன் பிறகு போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த ஸ்ரீவித்யா, தனது மாமனார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நேற்று மீண்டும் தனது தாய் மற்றும் உறவினருடன் செங்கல்பட்டு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு சென்றார்.
அங்கு அவர், தான் கொடுத்த புகாரின் மீது நடவடிக்கை எடுத்து மாமனாரை கைது செய்யாமல் இருப்பது ஏன் என்று கேட்டு போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அவரை போலீசார் சமரசம் செய்து வைக்க முயன்றனர். ஆனால் அதை ஏற்றுக்கொள்ள மறுத்த ஸ்ரீவித்யா, தனது மாமனார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அனைத்து மகளிர் போலீஸ் நிலைய வாசலில் தனது தாயுடன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து அவர்களை போலீசார் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.