துக்கம் விசாரிக்க வந்தவர் மயங்கி விழுந்து மரணம் – வாழப்பாடியில் பரிதாபம்!
வாழப்பாடி: வாழப்பாடியில் துக்கம் விசாரிக்க வந்த பெண் ஒருவர் திடீரென்று உயிரிழந்த சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வாழப்பாடியை அடுத்த தமையனூர் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி. கடந்த சில மாதங்களாக சுப்பிரமணி உடல் நிலை பாதிக்கப்பட்டு இருந்து வந்தார். இதை தொடர்ந்து நேற்று முன்தினம் அவர் நள்ளிரவில் உயிரிழந்தார்.
இதையடுத்து நேற்று காலை அவரது இறப்பு குறித்து துக்கம் விசாரிப்பதற்காக வாழப்பாடி அம்மம்பாளையத்தை சேர்ந்த வீரம்மாள் என்பவர் அங்கு வந்தார்.
சுப்பிரமணியின் உடலை பார்த்து அவர் கதறி அழுதார். மேலும் அவரது மனைவி ராணியையும் கட்டி தழுவி அழுதார். அப்போது எதிர்பாராத விதமாக வீரம்மாள் துக்க வீட்டிலேயே திடீரென மயங்கி விழுந்தார்.
இது குறித்து 108 ஆம்புலன்ஸ்சுக்கு அப்பகுதி மக்கள் தகவல் கொடுத்தனர். அங்கு வந்த மருத்துவப் பணியாளர்கள் அவரை பரிசோதித்தனர். அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். துக்கம் விசாரிப்பதற்காக வீட்டுக்கு வந்த பெண் மயங்கி விழுந்து இறந்த சம்பவம் அனைவரையும் துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.