மெரினா கடற்கரையில் குழந்தை கடத்திய பெண் – போலீசில் சிக்கினார்!
சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் பெண் ஒருவர் குழந்தையைக் கடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெருங்குடி அருகே உள்ள கந்தன் சாவடியை சேர்ந்தவர் ரெஜினா. இவருக்கு 6 மாத ஆண் குழந்தை உள்ளது.
கணவருடன் கோபித்துக் கொண்டு வெளியேறிய ரெஜினா குழந்தையுடன் நேற்று முன்தினம் சென்னை மெரினா கடற்கரைக்கு வந்தார்.
கணவருடன் பிரச்சனை:
அங்கு பல்வேறு இடங்களில் சுற்றிவிட்டு இரவு மாநில கல்லூரி எதிரே உள்ள பஸ் நிறுத்ததில் அமர்ந்து இருந்தார்.
பாத்ரூம் சென்ற ரெஜினா:
அப்போது அங்கு வந்த ஒரு பெண் ரெஜினாவிடம் பேச்சு கொடுத்தார். அந்த பெண்ணிடம் தனது சோக கதையை ரெஜினா கூறினார். பின்னர் ரெஜினா குழந்தையை அந்த பெண்ணிடம் கொடுத்து விட்டு பாத்ரூம் சென்று வருவதாக கூறி சென்றார்.
போலீசில் புகார்:
திரும்பி வந்து பார்த்த போது அந்த பெண்ணையும், குழந்தையையும் காணவில்லை. இது குறித்து அவர் ஜாம்பஜார் போலீசில் புகார் செய்தார்.
குழந்தையைத் தேடிய போலீசார்:
போலீசார் குழந்தையை தேடி வந்தனர். இந்த நிலையில் காசிமேடு சிங்கார வேலன் நகரில் ஒரு பெண் கையில் குழந்தையை வைத்துக்கொண்டு அங்கு வருபவர்களிடம் விலை பேசி கொண்டு இருந்தார்.
குழந்தையை விற்க முயற்சி:
‘‘இந்த குழந்தையை வளர்க்க முடியவில்லை. ரூபாய் 1 லட்சம் அல்லது ரூபாய் 50 ஆயிரம் கொடுத்து வாங்கி கொள்ளுங்கள்'' என்று கூறினார். இது பற்றிய தகவல் காசிமேடு போலீசுக்கு கிடைத்தது. போலீசார் விரைந்து சென்று அந்த பெண்ணை பிடித்து விசாரித்தனர்.
கடத்தப்பட்ட குழந்தை:
விசாரணையில் அவர் வைத்திருந்த குழந்தை கடற்கரையில் கடத்தப்பட்ட ரெஜினாவின் குழந்தை என்பது தெரிய வந்தது.
கடத்தல்காரி செல்வராணி:
அந்த பெண்ணின் பெயர் செல்வராணி என்ற ஆஷியாபேகம் (38) என்பதும் அப்துல் அஜீஸ் என்பவரின் மனைவி என்பதும் தெரியவந்தது.
போலீசார் விசாரணை:
பெரம்பலூர் மாவட்டம் பாடலூரை சேர்ந்த அந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். அவர் எதற்காக சென்னை வந்தார், குழந்தையை கடத்தும் கும்பலைச் சேர்ந்தவரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications