"என் மனைவி கொலைகாரி... கொள்ளைக்காரி”- கேரள வாலிபரை ஏமாற்றி மணந்த திண்டுக்கல் பெண்
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் கொலை, திருட்டு வழக்குகளில் தொடர்புடைய பெண் ஒருவர் அவற்றை மறைத்து கேரள வாலிபர் ஒருவரை திருமணம் செய்துள்ளார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்தவர் அனூப் ஜோசப் என்கின்ற வாலிபர். சென்னையில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்தார். இவர், திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சரவணனிடம் ஒரு புகார் மனு கொடுத்தார்.
அம்மனுவில், "எனக்கும், திண்டுக்கல் செட்டிநாயக்கன்பட்டி இந்திரா நகரை சேர்ந்த ஆன்சி என்பவருக்கும் கடந்த 2015 ஆம் ஆண்டு கேரளாவில் உள்ள ஒரு கிறிஸ்தவ ஆலயத்தில் திருமணம் நடந்தது. ஒரு வாரம் கழித்து என்னுடைய அக்கா குழந்தைகளின் பாஸ்போர்ட் விஷயமாக சென்னை செல்ல திட்டமிட்டோம்.
அதன்படி நான், ஆன்சி, எனது பெற்றோர் சென்னை செல்லும் வழியில் திண்டுக்கல் வந்தோம். அப்போது திண்டுக்கல் மகிளா கோர்ட்டில் ஒரு வேலை இருப்பதாக கூறி ஆன்சி அங்கு சென்றார். எதற்காக அங்கு செல்கிறாய் என்று கேட்டதற்கு என்னை திட்டினார்.
இதனால் ஆன்சியை பற்றி கோர்ட்டில் நான் விசாரித்தபோது அதிர்ச்சி தகவல் கிடைத்தது. அவருக்கு பிலோமினா, மீனா என பல பெயர்கள் இருப்பது தெரியவந்தது. கடந்த 2009ஆம் வருடம் தனது 15 வயது மகள் துர்கா, 9 வயது மகன் சூர்யா ஆகியோரை விஷம் கொடுத்து ஆன்சி கொலை செய்திருக்கிறார்.
இது தொடர்பாக திண்டுக்கல் வடக்கு போலீசார் அவர் மீது பதிவு செய்த வழக்கு நிலுவையில் உள்ளது. மேலும் பல ஆண்களுடன் அவர் தொடர்பு வைத்திருந்திருக்கிறார். ஆன்சி மீது விபசார வழக்கும், தேனியில் உள்ள ஒரு நகை கடையில் திருடியதாக வழக்கும் உள்ளது. போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் உள்பட 4 பேரை அவர் திருமணம் செய்திருக்கிறார். தன்னை பற்றிய அனைத்து விவரங்களையும் மறைத்து, பணம் பறிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் என்னை ஏமாற்றி ஆன்சி திருமணம் செய்துள்ளார்.
இது தொடர்பாக ஆன்சியிடம் கேட்டபோது ரூபாய் 50 லட்சம் மற்றும் 100 பவுன் தங்க நகைகள் கொடுத்து ஒதுங்கி விடுமாறு கூறுகிறார். இல்லையென்றால் என்னையும், என் குடும்பத்தினர் மீதும் பல வழக்குகள் போட்டு உள்ளே தள்ளி விடுவதாக மிரட்டுகிறார்.
நான் தற்போது திண்டுக்கல் ஸ்பென்சர் காம்பவுண்டு பகுதியில் வசித்து வருகிறேன். கடந்த சில தினங்களுக்கு முன்பு திண்டுக்கல் பஸ்நிலையம் அருகே சென்றபோது, 3 பேர் என்னை வெட்டி கொலை செய்து விடுவதாக மிரட்டினர். என்னிடம் பணம் பறிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் திருமணம் செய்து ஏமாற்றி மோசடி செய்த ஆன்சி மற்றும் என்னை கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்த 3 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
இவ்வழக்கு தொடர்பாக ஆன்சி உள்பட 4 பேர் மீது திண்டுக்கல் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.